Monday, December 12, 2016

அனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்


முயன்று முயன்று சொல்லாது தோற்றுப்போன ஆசைகளிலெல்லாம் கடைசியில் சூடான பெருமூச்சாய்  நீ தான் வந்து விழுகிறாய்.உன்னிலிருந்து எனைப்பிரித்துதெடுத்துவிட்டுபெரும் இறுமாப்புடன் தனித்திருக்கிறேன்.ஆனாலும் அனன்யா உன் பொன்பாதங்களை தொழுது, என்னிரு உள்ளங்கைகளில் உன்னை தாங்கியதும், வழக்கங்களையெல்லாம் புறக்கணித்து வேண்டிய  போதெல்லாம் நெருங்கியிருந்த நினைவுகளும் தகிக்கும் இந்த இரவுகளில் பேரலையாய் உள்ளே எழுந்து எனை பெரிதும் அலைக்கழிக்கின்றது.
நான் மிகவே நேசித்தவளே என் பற்றியதான படிமங்களே எனக்கு  முக்கியம் என்று உன்னிடம் அடிக்கடி உன் முகத்தெதிரே சொல்லியிருந்தேன்.பின்னும் நீ நேசித்தாய்.என் நேசத்தை வெளிப்படுத்திய போதெல்லாம் நீ வெண்ணிற மேகமாய் திரளத்தொடங்கினாய். ஆனாலும் நம் ஏதேனின் தோட்டங்களில் முளைக்கத்தொடங்கிய சர்ப்பங்கள் ஒவ்வொன்றாய் உன் குதிக்காலை தீண்டிய போதெல்லாம் உனை காத்துக்கொள்ள தவறியிருந்தேன்.நீ என் வாழ்க்கை முழுதும் வழித்துணை வந்தால் என் பயணங்கள் சுவாரஸ்யமாயிருக்கும் என்பதை சொல்லக்கூட திராணியற்றவன் நான்.இப்படியாய் நம்  நேசிப்பின் ஆழங்களில் நானே மண்மூடி நிரப்பிக்கொண்டிருந்தேன்.அவை தூர்ந்து போவதை கண்ணெதிரே கண்டும்,என் 'தெளிவாயிருக்கிறேன், என் பிம்பங்களை காத்துக்கொள்கிறேன்' என சுயசமாதானம் செயது கொண்டேன்.
நான் உனை நேசித்தேன் என்பது எதன்பொருட்டும் எங்கும் அறிக்கையிடப்படாமல் காத்துக்கொண்டேன். உன்னிலிருந்து விடுபட்ட சுதந்திரத்ததை ஒரு விடுதலையை போல கொண்டாடிக்கொண்டிருந்தேன். ஆனாலும் அனன்யா இந்த சுதந்திரமே பெரும் துயரமாகிப்போனதே..இத்தனை இடைவெளிகளின் பின்னும் தனித்த இரவுகளில் ஏதோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கிறேன். ஒன்றில் என் தேடல் நீயாய் இருப்பாய்,அன்றேல் நான் தேடுவது எது என்பதை நீ அறிந்தேனுமிருப்பாய்.

அனன்யா என் இதயத்தின் துயரமே,
இப்படியாய் ஒரு அந்தியில் உன் கைகளை இறுக கோர்த்தபடி நமக்குப்பிடித்தபடி பௌர்ணமி கடலை பார்த்துக்கொண்டே உன்னிடம் என் காதலை சொல்லக்கிடைத்திருந்தால்....

அனன்யா இங்கிருந்து எங்கேனும் தொலைவிற்கு போய்  மலையடிவாரங்களில் உன்னோடு வாழலாம் என்று கற்பனை செய்து ஆனந்திக்க விரும்பவில்லை.திருவிழாவில் தொலைந்த பிள்ளை தாயின் நெஞ்சில் புதைந்து அழுவதை போல இந்த நொடியே உன் நெஞ்சில் புதைந்து அழவேண்டும்.இத்தனை தூரம் என் அனன்யா உன்னை மீண்டும் நெருங்கமுடியா தொலைவிற்கு புறப்பட செய்துவிட்டேனே. இந்த இரவின் மாடியின் உச்சியில் நின்று பார்க்கையிலே ஔி உருண்டையாய் நீதான் இந்த நகரமெங்கும் வியாபித்திருக்கிறாய்.ஒரு தடவையேனும் உன்னிடம் கேட்டிருக்கலாம் அனன்யா.அன்றேல் ஏதும் பேசாமல் கோர்த்திருந்த நம் கைகளை திருப்பி ஒருதடவையேனும் நான் முத்தமிட்டிருக்கலாமே.

இத்தனை வருடங்களின் பின் இப்படி ஒரு இக்கட்டிற்குள் உனை பற்றி நினைக்கிறேன்.சீக்கிரம் இன்னும் வேகமாக உனை பற்றி நினைத்து  முடித்துவிட வேண்டும்.உனை சீக்கிரம் அனுப்பியது போலவே என்னையும் நான் அனுப்பி வைக்க வேண்டியிருக்கிறது.அனன்யா அடர் மழையும் இரவும், ஒரு கோப்பை கோப்பியும் தருகின்ற கவிதைகளைவிட உன் மீது கொண்ட வேட்கையும் நேசமுமே எனக்கு கிளர்ச்சிமிகு கவிதைகளாயிருந்தன.அனன்யா யாரையும் போல இல்லாத உன்னை யாரால் பிரதி செய்ய முடியும்  சொல்.
இத்தனை நாட்களாக அனன்யா  அனன்யா என புலம்பியபடி நான் கேட்ட கேள்விகளுக்குகெல்லாம் உனக்கு பதில் தெரிந்திருந்தும் திறக்கப்படா மிருதுவான உதடுகளோடு, மிக சாந்தமாக இருந்தாய். வலி என்று தெரிந்தும் வருடாத உன் விரல்களின் புறக்கணிப்பே எனை அச்சுறுத்துகிறது.அனன்யா உன் வாசலில் பொறிக்கப்பட்ட நம் பாதங்களை பார்க்வென நீயுமறியா நேரத்தில் காற்றாய் வருவேன்.இத்தனை காலத்து வாய்ப்புக்களையும் உனக்காக தவிர்த்துவிட்டு  என்றேனும் ஒருநாள் உனை காண்டடைவேன் என திண்ணமாய் நம்பினேன்.தேடி வந்த மாலை ஒன்று தோள் அமரப்போகிறேன் என்கிறது.அன்பே  வாசல்கள் யாவற்றையும்  அடைத்துவிட்டு  வலுவாய் சிரிக்கும்  காலத்திடம் மண்டியிட்டு மன்றாடினாலும்  மனமிரங்காதே..

அனன்யா நீலக்கடல் நின் நினைவு,அலைக்கழிக்கிறது.நான் நினைப்பதை இப்போதே ஒப்பித்துவிடுடோமென்றால் இரைச்சல் மட்டும் தான் ஒப்பிக்க முடிகிறது.அனன்யா என் அனன்யா மிகவே தனித்திருக்கிறேன் இந்நொடியில்..இனியும் ஔிந்து கொள்ள இடமில்லை.காப்பாற்றும்படியான வார்த்தைகளுமில்லை.எத்தனை தொலைவு வரை தான் ஓடுவேன் சொல்?  :(
எனை தேற்றத் தெரிந்தவளே ,
எல்லா அனுமானங்ளின் பொருட்டும் எனக்கான சங்கடங்களின் பொருட்டும் எனை அணைப்பதாய் பாவித்து தேற்றிவிடு.நானும் உன் மெல்லிய விரல்கள் என் கேசத்தின் ஊடு படருவதாய் நினைத்துக்கொள்கிறேன்.எப்படிமக்கான இந்த வார்்தைகளை முடியவைப்பனெதெரியாமல் ஏதேதோ சொல்லிக்கொண்டிருக்கிறேன்.அனன்யா நீ ஒருமுறை கருணை கூர்ந்து எனை கடந்துபோகையில் விரல் நுனியால் முட்டிவிட்டேனும் போ.நீ தீண்டா வாழ்வனைத்தும் துயரின் அடர்ந்த நீலமாய் எனை அலைக்கழிக்கும்.

Saturday, August 27, 2016

தீராக்காதலின் முத்தக்காரா

நேசத்தில் தோய்ந்து வழுக்கிய காலங்களில்
நின் விரல் தொட்டு உலர்ந்த மழைப்பொழுதுகளில் உன் ஈரப்பாதங்கள்..

குறையாத நம் முத்தத்தின் உஷ்ணங்கள் எனை பின்னிக்கொண்ட நாளிகைகளில்
மையலுற்றுனையே நீங்காது நோக்கியிருந்த வேளை
துடித்தடங்கும் இதயத்தின் முடுக்கெங்கும் படலமாய் முளை கட்டியிருந்த நின் வாசங்கள்...

எங்கிருப்பதென் விரலென தேடிச்சேர்கையில் காற்புள்ளிக் காற்றும் இருக்கவில்லை.
கைமுளைத்த காற்று நமை நகர இடமின்றி அணைத்திருந்தது..

உன்னை ஸ்நேகிக்க ஸ்நேகிக்க போதையாய் பொழியத்தொடங்கிய மரங்கள்..
கூடைகள் நிரம்பிய இளவேனில் இரவொன்றில் சருகிலிருந்து முளைத்த பூக்களோடு உற்சவமாய் நம் அன்பை வரையத்தொடங்கினாய்..
நீள  கனவு இழையும் வரையும் நிலவுப்பொழிவு நிகழ்ந்துகொண்டேயிருந்தது..

மல்லிகையானவனே என் வானமெங்கும் பரவி படர்ந்துகொள்
மெல்லிய காலை புலர்கையில்
கொலுசு சத்தமிடுவேன்
நம்மோடு நிலவு மறைந்துபோக
உச்சிமுகரும் முத்தங்களோடு வெளிச்சக்கனவு தொடங்கட்டும்

என் வகிடு நீ பிரித்து நீட்டி விடும் சாலைகளில் பொழுதெல்லாம் உலவிக்களிப்போம்.
பாதியும் பின் மீதியும் நீயாகி நிறைந்த பின்பு உனை சுமக்கும் காலங்கள் பேறுபெற்றவை.

கட்டுண்டு கிடக்கும் நேசிப்பின் நரம்புகளில் தடுமாறி விழுந்தாலும் பற்றி எழும் இடமெல்லாம் மீட்டும்படி இருக்கிறாய் ஸ்நேகிதா..

நேசத்தின் ஆதிமுதலே
நீ எழுதத்தொடங்கும் வரிகளை
என்மொழியில் படித்து விடும் பிள்ளைத்தவறுகளில் மறக்காமல் புன்னகைக்கிறாய்..
பின்னுமொரு கவிதை எழுதுகிறாய்

முத்தக்காரா
ஆண்வாசம் புறப்படும் நம் அறையில் ஆடைகள் நாணிக் கண்மூடும்..
எனைமூடும் மூச்சுக்கதகதப்பே...

உன்னிலிருந்து புறப்படா என் வேர்களை துண்டிக்க துணிந்த பின்னும்
வட்டமிடும் ஞாபகப்பறவையை துரத்தியடிக்காமல்
கைகளில் இருத்திக்கொள்வேன்
யாதொன்றும் தோன்றாத நீண்ட இரவுகளில்  பறவையை பேசவிட்டு இக்காட்சிகளை மீட்டிக்கொள்வேன்
முதுபெரு நரையிலும் நின் முத்தத்தை நினைக்கையில் கம்பீர காதல்வந்து காலூன்ற
தீராத தித்திப்பொன்று உள்ளூர இனித்துக்கிளம்பும்♥♥♥

அதிசயா

Saturday, July 2, 2016

இழைகின்ற ஈரக் கனவுகளால் எனை பின்னிக் கொள்வாய்...!.

நிரம்பா வாழ்க்கையின் குவளைகளில் நேசம் ஊற்றி முயன்றுகொண்டிருந்த பாதி ஜாமங்களை பற்றி அழகு அழியாத் தனிமையில் என் காதோரங்களில் நீதான் பேசிக்கொண்டிருந்தாய் அனன்யா.ஒரு வாக்குறுதி போல தீர்க்மாயிருந்தது உன் உஷ்ணங்கள்.மொட்டவிழும் அந்தக்கணங்களை மிக அறிந்த காற்றாய் நீயும் எனை தளர்த்தும்  அந்த நிமிடங்களை தெரிந்திருந்தாய்.

நடு இரவில் உன் அழைப்பு மணியருகில் அழுத்தவா வேண்டாமா என்ற அங்கலாய்ப்புடன் பாரங்களை சுமந்தபடி ஊசலாடிக்கொண்டிருந்தேன்..பின்னும் அனன்யா என் மரியாதைக்குரியவளே, எனை லேசாக்கும் உன் பரிசுத்த சிரிப்புடன் திரைச்சீலை விலக்கி நீ தோன்றினாய்.என் ஸ்நேகிதியே உனை தொழவென நீழும் கைளின் நடுக்கங்களை இனியும் மறைப்பதாயில்லை. என் குற்றங்களுக்கெல்லாம் கழுவாக உனையே சரணடைந்தேன்.
கைவளையல்கள்  நழுவி விழுமளவு மென்மையானவளே எப்போதும் போல் என் பாரங்கள் இப்போதும் உனை அழுத்தாது என்கிறாய்.நீ ஊடுவப்பார்க்கும் உற்று நோக்குதல்களில்  தான் நான் தூயதாகிறேன்.மழைக்கு முன்னொரு கூதல் காற்றாய் உனை உணர்த்தும் வாசங்கள் நாசிகளில் ஊற ஊற என் நரம்பெல்லாம் நீயாகி உள்ளே முளைக்கத்தொடங்குகிறாய். குழந்தையின் தும்மல் கணம் போல் சட்டென,பார்ப்பதற்கு அதிஅழகாய் நேர்ந்து விடுகிறது இம்மாறுதல்கள்.

எரிகின்ற சூரியனின் இறங்கும் என் முதுகிலே தான் துளியளவும் வாட்டமின்றி இன்னும் படர்திருக்கிறாய் அனன்யா. என் கைகளை குவித்து உனை அதற்குள் பாதுகாக்கவே முயல்கிறேன். நீயோ குளிர்ந்த முத்தங்களை பூமியில் இறக்கி எனை இயக்கிக்கொண்டிருந்தாய் நானும்  அந்தியெல்லாம் உன் விரல்களை பற்றியபடி பெருத்த சங்தோஷங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தேன் ,தேம்பி நடுங்கும் என் உதடுகளை உன்னிடமிருந்து மறைத்திருந்தேன். ஆனாலும் என்னோடும் நின்னோடும் முடிகின்ற பொழுதுகளில் எனைச்சூழ்ந்த தழும்பெல்லாம் ஆறும் ஆறும் என்றபடி உனை போர்த்தி எனை துயில்வித்தாய்.காலைக் கோப்பியைவிட இதமாயிருக்கும் உன் உஷ்ணத்தின் கீற்றுப்பட்ட என் புலர்தல்கள். அனன்யா.....

நடுங்குமென் நினைவுகளின் கடந்த நாட்கள் பற்றி இப்போது என்னிடம் கேட்பாயாக.
தீ இல்லாது எரியும் இத்திரியை மெதுவாய் அணைக்கத் தெரிந்தவளே இத்தனை வருடங்கள் புறக்கணிப்பின் ஊசிகளால் எனை குத்திக்கொண்டிருந்தேன். மர்மத்தின் சுடர் போல எனை மறைக்கவென முக்காடிட்டிருந்தேன்..அனன்யா என் தாயுமானவளே சிறுமையுற்றவனாய் உணர்ந்திருந்தேன்-ஒரு புழு போல.ரயில் ஓடும் வயல்வெளிகளில் ரகசியமாய் உதிர்ந்து விடும் சிறு கதிர்மணியாய் யாருமறியாதபடி தோல்விகளில் உடைந்திருந்தேன் தாயே.என் கறைகளை கழுவும் மழையிலும் நான் நனைந்ததில்லை எந்த துளியும் போதுமானதாயிருக்கவுமில்லை. எனை எப்போதும் ஒப்பிக்கவிரும்பாத நான் தான் இப்போது உன் அரும் தோள்களில் புதைந்தபடி இதையெல்லாம் சொல்கிறேன்.

என் அனன்யா நீ மெதுவாய் ஸ்பரிசித்தால் இப்போது இந் நடுக்கங்கள் நிற்க்கக்கூடும். உன்மடிதனில் உடைந்தழுது விடுவேன் போலிருக்கிறது. மூன்றாம் சந்திப்புக்கள் முக்கியமானவை. இப்போது தான் உன்னிடமாய் ஒப்பிக்கிறேன்.அனன்யா காலம் நமை வெகுவாய் நெருக்கையில் உன்னிடம் எனக்கான நாட்களை நீட்டிக்கும் வல்லமை தாராய்.ஓரேயொரு முறை அனன்யா என் கேசம் கலைத்து ,தாடைகளில் விரல் பரப்பி, மெலிதாய் அரும்பியிருக்கும் உரோமங்களில் முத்தமிடு.அற்புதமான தருணங்கள் கண்மூடுகையில் நிகழும் ஆனாலும் நொடியளவும் இமைமூடாதே என் அதிஅற்புதமே.என் கண் பார். எதிலும் இனிமையான உன் தளிரடி விரல் பற்றி, கண்ணில் ஒற்றி முத்தமிடுகிறேன். அனன்யா இத்தனையும் நீயென்றானபின் இனி இமை மடிவேனோ?உனைத் தொழுதெழும் பக்தியின் பரவசங்களில் மட்டும் இமை மூடித்திறக்கட்டும். நான் பார்க்குமிடமெல்லாம் எனக்காய் தெரிக்கிறாய். கூரிய கண்களாய் தடை உடைக்க கற்றுத்தருகிறாய். உனை சரணடைவதில் தோற்கின்ற என் கர்வங்கள் குறித்த பயம் ஏதுமில்லை.ஆதலால் நம்மோடு இழைகின்ற ஈரக் கனவுகளால் நமை பின்னிக்கொள்வோம்.
  

அனன்யா நம் சந்திப்புக்கள் தீர்ந்து உன்னிலிருந்து உதிரும் காலங்களில் விஷம் போல நெஞ்சை அடைக்கும் துயரை காடுகளெங்கும் பாடியபடி அகல்வேன். தித்திப்பு மிக்க இந்தக் கணங்களில் இறுகத்தழுவி என்னிடமிருந்து உனை பறிக்கப்போகும் காலத்தை நிந்திக்கிறேன். காமுறுதல் கலையென கற்பித்தவளே தாழிடாத உன் கதவினிலே ஏதேனும் வாக்கியத்தை எழுதிவைப்போம். நிரந்தரமாய் இக்கதவுகள் அடைபடுகையில் தழுதழுக்கும் துயரத்துடன் வாசலில் நின்றபடி கடைசியாய் முழந்தால் படியிட்டு சொல்லிவிட்டு போவேன். அனன்யா.......அனன்யா நீ போதையாய் இருக்கிறாய். இப்போது எனக்கு போதுமாயும் இருக்கிறாய். 

-அதிசயா-

Wednesday, May 4, 2016

துயர் காய வருகிறேன் பார்த்தீபா...!

விரலிடை கணுவெல்லாம் நிரம்பி நெருங்கு பார்த்தீபா
எப்போதும் நிகழ்ந்துவிட்டிராத அணைப்புக்களையும்
இனி நிகழவே கூடாத  நெருக்கங்களுக்கும் சேர்த்து
இப்போது ஒரே ஒருமுறை நிரம்பி நெருங்கு. 
இனி நாம் கடந்து போவோம்.
உணரதாவற்றை  துறப்பது மெய்நிலைத்துறவாகாது..
ஆதாலால் இப்பிரிவிற்கு முன்னேனும் ஒருமுறை என் கழுத்தோரம் கட்டிக்கொள்..
பார்த்தீபா இச்சை அற்ற இத்தழுவல் ஒரு தீபோல உனை நெருங்கட்டும்..
உன்னில் துயர்காய வந்தேன் பார்த்தீபா.. 

நேரப்போகும் இவ்வாழ்வில் ஏதேனும் ஞாபக இழை பற்றி நீ உள்ளேறி விடுவாய்..
எனை சூழ்ந்தே அசைவாய்..
ஆனாலும் பார்த்தீபா அப்போதைய என் சந்தோசங்களேனும் அடர்ந்த கண்ணீரேனும்
உனக்கு சங்கடத்தையே உண்டாக்கும்
ஆதலால் காற்று வாசம் கொள்ளும் பொழுதுகளின் 
இப்படியாய் இனி என்னருகில் நெருங்காதே 
ஒரு குமிழி போல் நான்.
மற்றொரு தீண்டலில் நிச்சயம் உடைந்து போவேன்.
குறிப்பெழுதி வை.
இன்னொரு தரம் இதை சொல்லுமுன் 
என் இறுக்கங்கள் தளர்ந்து போய்விடும்.
பின் மீண்டெழுதல் என்பது அபத்தம்.
கிறக்கத்தை உண்டாக்கும் சிநேகத்தின் பிம்பங்கள்
பின்னாளில் பெரும் நிழல் போல துரத்தும்..
பார்த்தீபா அப்போது பகிரங்கமாய்  ஒதுங்க முடியா அந்நிழல்
சிறுபிள்ளை தன் நிழல் பார்த்து மருள்வது போல பயமுண்டாக்கும்..
நிழலாய் தொடராதே பார்த்தீபா
அந்நாளில் மருட்சியை தாங்கும் மனத்திறம் கொண்டிரேன் 

இனியும் நீயில்லா அவ்விருக்கைளில் அந்திப்பறவை வந்து அமரும்..
சருக்கின் ஓசையெல்லாம் நடுநடுங்க உடைதலுறும்
பின்னும்  மற்றொரு நேசத்திற்காய்அவ்விருக்கையில் இலைதுளிர்க்க ஆரம்பிக்கும்.. 
பார்தீபா உனை நானும் உணர்ந்தேன் என இதன்பொருட்டு அறிந்துகொள்.
இறுதியும் முதலுமான தழுவலில் தான் இதை சொல்ல முடிந்தது..

கண்ணீரையும் மீறி சந்தோஷிப்போம்
கானல் கானல் என்று உயிர்வற்ற கதறி மனப்பாடம் பண்ணியபின்னும்
நிர்க்கதியான நம் பாதங்களை சூழ்ந்துகொள்ளும்
இந்நேச அலையிடம்பூக்களை நீட்டுவதா 
அன்றேல்வெறிபிடித்தவள் போல் தலைதெறித்து ஓடுவதா??நீயிருக்கையிலே, 
நீபார்க்கையிலே நமக்காய் அழுது விடுகிறேன்.
தண்ணீர்வரப்படிகளிலும் தனிப்பயணங்களிலும்
சிரிக்கும் உன் கண்கள் கொண்டு எனை தண்டித்துவிடாதே...
எப்போதும் எனை பார்க்காதிருக்க சாபமிட்டு போ..!  
பார்த்தீபா தித்திப்பான வில்லைகள் போலிருக்கும் 
அணைப்பின்கசப்பான துயரங்களை உன் துணையின்றியே தாங்கியாகவேண்டும்.

முள்போல் மெலிந்த கருத்தமாவின் விரல்களிலும்
பொன்மஞ்சள் முடியுடை நகர்ப்பெண்ணின் இடையிலும்
வீட்டிற்கு மூத்தவளின் கழுத்தோர உரோமங்களிலும்
நேசத்தின் வாசமொன்று வாடையாய் மாறியிருக்கும்

பார்த்தீபா அழுத்தமாய் அதீதமாய் அணைத்துக்கொள்.
நீ வேர்பிடித்திருக்கிறாய்..
உனைக் கழுவமழையென இறங்கும்இக்கண்ணீரை  மறைக்கமாட்டேன் காண்....
என்  பாதத்தில் உனை இட்டுவலி களைய கனவு கண்ட காலங்களில்
கைகோர்ப்பின் கதகதப்பு பற்றிய சிலாகித்த இரவுகளிலும்
முத்தமிட்டபடியே கடப்போம் எனநினைத்த சச்சரவுகளிலும்
கண்ணீரெனும் எரிதிரவம் இட்டுவிடு.

இத் தழுவலில் வகிடுவழி பிரிந்து கொள்ளும் கேசம் போல
நம்மிலிருந்து விலகிப்போவோம்.
இன்னுமின்னும் வாசற்படியருகே கண்ணியத்தை கட்டி வைத்திருக்கிறேன்.
மலரானானும் நுகமானாலும் எனக்காய் உடைக்க வலுவற்றவள் நான்..
பின்னும் இங்த இறுதி தழுவலை விட உனைச்சேர வழியில்லை..

தழுவி விடை கொடுக்கும் தைரியங்களை
நிதானமான ஒருநாளில் வகுப்பெடுத்திருந்தேன் 
பார்த்தீபா  இத்தனை அடர்தியாய் உன்மீது படர்ந்திருந்தேன்
மலைமுகட்டில் இறகு உதிர்த்தும்  கழுகைப்போல
என்னிலிருந்தான உன் சாயல்களை பிடுங்கி எறிகிறேன்.
காண் அதையும் காண்


அத்தனையும் கண்டபின் உன்அணைப்பிலிருந்து
என்னைதளர்த்தி விடு.
நடுங்கும் இவ்விரல்களை சொடுக்கு எடுத்தபடி புறப்படும்
இக்குற்றக்காரியின் மனக்கோணல்களை மன்னி..! 
பார்த்தீபா....,
அனன்யாவை மறுதலிக்கும் மனத்திற்காய் பிராத்திக்கிறேன்.
இணையாய் ஆற்றமுடியா என் நேசத்தின் ஓலங்களை ஒப்புவிக்கிறேன்.
பார்த்தீபா என் சுவடு மறைத்த உன் சாலைகளில் கைகுலுக்கிக்கொள்ளாதிருப்போம்.
எந்த சாலையும் மீண்டும் உதிப்பதற்கு துளி அழுகையே போதுமாயிருக்ககூடும். 


-அனன்யா- 

Saturday, March 5, 2016

நிலவானவளே நேற்று நீ இருந்தாய் ஓர் அற்புதம் போல.இப்போதும் அப்படியே தான்..

அனன்யா இன்று உனக்கொரு சத்தியம் செய்கிறேன்.என் மீது காட்டும் பிரியங்களின் பொருட்டு எனை திருமணம் செய்து கொள் என்று உனை கேட்கமாட்டேன் அனன்யா.உன் மீது மிகவே மரியாதை கொண்டுள்ளேன்.உனை யாரென்று அறியாதவன் நான்.ஆனாலும் நீ தேவதையாய் இருந்தல்வா என்னை ஆசீர்வதிக்கிறாய்.உனக்கான கனவுகள் மீது என் விருப்பங்களை திணிக்க மாட்டேன் அனன்யா.ஒரு காற்றுப்போல இப்போது இக்கணம் உனை உணர்வதே போதுமாயிருக்கிறது.
அனன்யா திருமண மாலையின் பாரங்கள் உன் மென்மையான சிறகுகளை பலவீனப்படுத்தும்.ஆதலால் திருமணம் பற்றி பேசமாட்டேன்.உன்னுடன் கூடவே வாழ்வனைத்தும் ஓர் வழிப்போக்கன் போல வந்து விடுகிறேன்.அனன்யா என் சபல புத்தியும் திடமற்ற நினைவின் பொருட்டேனும் என்னையும் விரல் கோர்த்தபடி கூட்டிச்செல்வாயா?
நீ இன்றி என்னால் இங்கு இயங்க முடியவில்லை அனன்யா.இந்த காட்டில் இப்போது பொழியும் குளிர்ந்த நிலவும் உன் உதட்டுச்சாயமும் போதும்.இரவையும் பகலையும் மாறிமாறி படைத்தபடி இங்கேயே வாழ்ந்துவிடுவோம்.பின்பு நம் கேசத்தின் சரிவு வழி வேறோர் தேசம் போய்விடுவோம் அனன்யா.என் நிலவானவளே நேற்று நீ இருந்தாய் ஓர் அற்புதம்  போல.இப்போதும் அப்படியே தான்....இப்பளிங்கு விரல்கள் போல் ஏதேனும் உண்டோ சொல்.போர்க்களத்தின் முன்வரிசையில் நின்றிருந்தேன்.நடுக்கமுறும் கால்களை நிறுத்தி வைப்பதே எனக்கு போராட்டமாய் இருந்தது.ஆனாலும் விசுவாசம் மிக்க போராளியாய் எனை காட்டிக்கொண்டிருந்தேன்.போதும் அனன்யா இனி உடைவாள் மற்றும் ஆயுதங்களை அனைத்தையும் ஸ்பரித்து நீ பூக்களாக்கிவிடு.என்னை நான் விரும்பும் உருவமாகவே இருக்கவிடு.நேசித்தல் ஒன்றே தேவை.அதுவும் உன்னிடமிருந்தே வேண்டும் அனன்யா.இச்சந்திப்புக்கள் எதுவரை நீளுமோ?இளைப்பாறுதலே உன்மீது கிறக்கமுற்றிருக்கிறேன்.ஆனாலும் என் நிதானங்களை உன் தேவ நேசத்தால் நிரப்பி வைத்துள்ளேன்.ஆதலால் சத்தியம் செய்கிறேன்.

அனன்யா  உன் போல் ஆறுதலை வேறுஎங்கும் உணரவில்லை.அடிமனதில் உறைந்து போன அச்சங்களும் பிடிப்பின்மையும் நடுநிசிகளில் அலறலாய் துரத்துகிறது அனன்யா.என்னிடமிருந்து தப்பித்து ஓடிக்கொண்டிருக்கிறேன் அனன்யா.வீடற்றவனின் வேதனைகளை ஒத்தது இந்த தப்பியோடல் என்பது.எதுவரை அனன்யா ஓட முடியும் சொல்? யாருமே கேட்கவில்லை என்கிறார்கள்,அன்றேல் பழகிவிடும் என்கிறார்கள்.என் அனன்யா பக்கம் வா.உனக்கே கேட்கும் அனன்யா அந்த அலறல்கள்.அதன் பின்னும் இப்படியே தான் எனை நேசிப்பாய்.பின் எப்படி நீ இல்லாத இரவின் பாடல்களை ரசிக்க முடியும்.மருண்டு போய்விடுவேனே.வேண்டாம் அனன்யா என்னையும் கூட்டிப்போய்விடு.ஏகாந்தம் ஒன்றில் எனை தரித்துவிடு.அனன்யா முடிந்தவரை முயன்றுவிட்டேன் அனன்யா.எந்தப்பாடல்களிலும் பொருள் இருப்பதாய் தோன்றவில்லை.இதை சொல்லி அவர்களை சங்கடப்படுத்தவும் முடியவில்லை.அனன்யா உனை நிர்ப்பந்திக்கவில்லை.ஆனால் தயை கூர்ந்து கருணை காட்டகேட்கிறேன்.எனையும் கூட்டிப்போ..அன்றேல் நாளையும் இங்கு வா அனன்யா..

Thursday, March 3, 2016

அனன்யா இந்த மழை இரவுகள் இனிமேல் உனை அன்றி யாரை நினைவுபடுத்தும்...!

அனன்யா உன்பாதங்களை என் மடிமீது ஏங்திக்கொள்கிறேன். இந்த மென்மைகளுடனே இப்பொழுதை கடந்து விடுவேன்.அனன்யா எனக்கொரு காதல் இருந்தது.அது இன்னும் ஒரு பாடலை போல நினைவிருக்கிறது.அது ஒரு முரண்காதல் என்று நீ சொல்லமாட்டாய்.எதைப்பற்றிய நினைவுகளுமற்று வெறும் காதலால் இயங்கிக்கொண்டிருந்தேன்.அனன்யா நானாய் மடித்துக்கொண்ட சிறகுகளை வெகுதூரம் தாண்டி விரிக்க துணிந்த காலம் அது.இப்போது  சிறகுகளை பற்றி நினைக்கவே பதறுகிறேன்.அனன்யா இந்தப்பொன் பாதங்களை ஒரு தடவை முத்தமிட்டு கொள்வேன்.அனன்யா காதல் கொள்வதை தீட்டு என்று நினைத்த பதின்ம வயதுகளை போல மீண்டும் நேசம் துறந்த ஏகாந்தத்திற்குள் வாழும்படி என்னையே சபித்துக்கொண்டவன் நான் அனன்யா.

ஆனாலும் அந்த ஏகாந்தமே எனக்கு சுதந்திரம் என்று கருதினேன்.என்றேனும் ஜன்னல் அருகில் நின்னறபடி நானாய் விடைகொடுத்த அந்த நேசத்திற்காய் கற்பனையில் கையசைத்துக்கலங்கியிருக்கிறேன்.அனன்யா அறியாவா? என் இத்தனை இறுக்கங்களின் பின் விட்டுப்போன சாரல் ஒன்று இருந்த்து என்பதை??பின்னாளில் ஏதேதோ கடமைகள் இலட்சியங்கள் முகமூடிகள் பந்தங்கள் என்றான பயணங்ளில் இப்போது குற்றவாளியாய் பரிதாபத்திற்குரியவனாய் எனை காண்கிறேன்.யாராலும் தேற்றிவிட முடியாத என் அழுகைகளை உன் ஸ்பரிசம் ஒன்றே குணமாக்கும் என்பதை அறிவாய்.

அனன்யா ஆறுதலளிப்பவளே என் மீது பரிதாபம் கொள்ளமாட்டாய் என்று இப்போதும் நினைக்கிறேன். வாழ்வென்பது பயணமே.உள்ளே ஆழ்ந்த அமைதியை வளர்த்துக்கொண்டு இந்த உலகெங்கும் பயணிக்க வேண்டும்.காற்றுப்போல..அறியாதமுகங்கள்..யாருமற்ற தெருக்கள் காட்டுப்பாதைகள் என நிமிடங்கள் எல்லாம் துருதுரு என்று இயங்கவேண்டும்..ஆனால் அனன்யா ஒரு குளம் போல நீண்ட நேரமாய் இங்கே தான் தேங்கியிருக்கிறேன்.பாசிமூடி வெளிச்சங்களை மறந்த குளம் போல...அதுவே எனக்கு மிகுந்த துக்கத்தை உண்டாக்குகிறது.அனன்யா என்அனன்யா கேள் இதுவல்ல நான் என்று உரக்கக்கத்த வேண்டும் அன்ன்யா.

உனை மூத்தவளாய் பெற்றிராத உன் அன்னையின்  இரக்கத்திற்காய் கடவுளுக்கு நன்றி.மூத்த மகனின்..மகளின்..சாலைகள் இளையவர்களை காட்டிலும் கடினமானது என்பதை அறிந்து கொள்.உனை மூத்தவளாய் பெற்றிருந்தால் இத்தனை மணிகளாய் நீ என்னை சகித்திருக்கமாட்டாய். மூத்தவர்களின் அலாரங்களாய் அம்மாவின் முத்தங்களாலும் கண்ணீராலும் ஆனது.நீ இரக்கமானவள்.இந்த வழிப்போக்கனின் விசும்பல்களை கவிதை போலல்லவாகேட்டுக்கொண்டிருக்கிறாய். மீண்டும் எப்போது  காண்பேன் அனன்யா??ஆதலால் தான் இத்தனை இறுக்கமாய் உன் கைகளை பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கிறேன்.அனன்யா இந்த மழை இரவுகள் இனிமேல் உனை அன்றி யாரை நினைவுபடுத்தும்.அனன்யா பரிசுத்தமான உன் ப்ரியங்களை காட்டிலும் வேறெந்த எண்ணமும் என் மனதில் இல்லை .ஆதலால் நீ நெற்றிவியர்த்து நகங்களை கடித்தபடி எந்தப் பொய்களும் சொல்லவேண்டியிருக்காது அப்பாவிடம்.உன்னை இப்படி ஆசுவாசமாய் பார்க்கவே ஆசைப்படுகிறேன்.அனன்யா....!

 



-அதிசயா-




Related Posts Plugin for WordPress, Blogger...