Tuesday, May 27, 2014

நேசத்துறவு





இனிமேலும் நேசத்தரிப்பிடங்கள் பற்றி நினைப்பதாயில்லை.
நீண்டதாயினும் நெடுந்துயர் சுமந்ததாயினும்
இதுவரையும் போலவே ஏகாந்தமாய் கடந்து விடவே விரும்புகிறேன்
வரட்சி மிக்க பாலைவன பயணங்கள் அனைத்தையும்..
ஒரு போதும் முடிந்து விட்டிராத என் நேச எதிரிகளே..
அடிக்கடி போர் தொடுங்கள் என் தேசம் மீது..
முற்றுப்பெறாத இக்கிண்ணம்-நிறைந்து விடத்துடிப்பதெல்லாம்
வீரங்களால் மட்டுமே..
மட்டற்ற பெருவெள்ளம் ஒன்றில்
மரிக்கும் அந்தரங்களில் கூட
நாவு தவிப்பது போல்
எல்லா பேரானந்களின் பின்னும்
ஏதோ ஒரு சிலிர்பை உண்டாக்கி விடுங்கள்..அது
ஆத்திரமாய் அழுகையாய் ஆவேசமாய்
எப்படியாயினும்.
வடிவம் குறித்த கவலை எனக்கில்லை
வேண்டுவதெல்லாம்
ஏகாந்தங்களில் விரியும் வீரச் சுதங்திரங்களையே...!
-அதிசயா-

Thursday, November 14, 2013

மற்றொரு மழைக்கொத்து!!!


சொந்தங்களுக்கு அதிசயாவின் அன்பான வணக்கங்கள்.

கார்காலத்தில் கதவருகிலே நின்றபடி தேநீர் கதகதப்புடன் இப்பதிவை பகிர்ந்து கொள்கிறேன்.மனதிற்கு மிகவே ரம்மியமான ஒரு நினைவோட்டம் இது.மிகவே அனுபவித்து என்னுள் மெய்சிலிர்த்து இப்பிரபஞ்சதின் மதுரஅருவியொன்றின் மடியமர்ந்திருப்பதாய் தான் உணர்கிறேன்.
ஆம் சொந்தங்களே கார்காலத்தின் பரவசம் உண்டாக்கும் ஒரு சொட்டு தேநீர் போல மழைகாலத்தின் நீண்ட வழிப்பணயங்களும பேரானந்தமானவை.அதிசொகுசுப்பயணயங்களில் மட்டுமல்ல சாதாரணமாக வாய்க்கின்ற கீழ்தட்டுப்பயணங்களை கூட இந்த பரவசங்கள் சந்திப்பதை மறுப்பதற்கில்லை.

  
 இயல்பாகவே கேசம் கலைக்கும் ஈரக்காற்று என்றோ முத்தம் பெற்ற நெற்றிப்பொட்டை கடந்து போகையில் அந்தப்பொழுதின் அத்தனை சிருங்;காரங்களையும் நெஞ்சுக்கூட்டில் நிறைத்துப்போகும்.சிலிர்த்ததேகம் நேசக்கதகதப்பால் நிமிர்ந்து கொள்ளும்.தங்தையின் நெஞ்சுள் புதைந்திருக்கும் குழந்தையாய் இதமாய் உணரும் இடைவெளிகளில்  ஜன்னலோரத்தின' ஈர உலகம் ஆயிரம் கதை சொல்லும்.கம்பி ஒன்றின் மையம் பற்றி ஊஞ்சலாடும் நீர்க்குமிழியில் பிரபஞ்சத்தின் வேதங்களும் ஞானங்களும் திருப்தியான வீதத்தல் நிறைந்திருக்கும்.புலன்கள்,நரம்புகள் தேகமெல்லாம் பரந்திருந்தாலும் ஆன்மாக்குள்ளே மட்டும் கொலுவிருக்கும் உயிரின் கனவுகள் போல பெரியதொரு தேசத்தை தன்னுள் நிறைத்து இதுதான் உலகம் என அன்பாய் சொல்லும்.

 மழையில் நனைந்தபடி வயலின் இசைக்கும் பெண்ணொருத்தியை போல இப்போது கண்மூடி அசைந்து கொடுக்கிறேன் இந்த மழைத்தாளங்களுக்கு!கேசங்களால் வழிந்து வயலின் நரம்புகளில் தெறிக்கும் நீர்க்கோலங்கள் போல மனதோடு கோலம்போடுகிறது இந்த அனுபவங்கள்.
குடைகளை வீசிவிட்டு ஆகாயம் நோக்கி கைகளை அகலவிரித்து மழைநடனம் ஆடுகிறேன்.மிக்சாரக்கம்பிகளில் சமநிலைகொள்ளும் காகங்கள்,வெளியூர் தந்தைக்காய் கலர்கலாரய்  கப்பல்அனுப்பும் குழந்தை,இதோ இன்னும் நெஞ்சுவிட்டகலாத அந்த ஜோடிகளின் மிகவே நெருக்கமான இதழ்முத்தங்கள்,பிரிந்து சென்ற காதலொந்றிற்காய் தனியே அழுதுகொண்டிருக்கும் தெருவோர இருக்கை,விழுதுகளுக்கு பூக்கள் ஊற்றும் நேசத்தீர்த்தங்கள் இப்படியாய் ஆயிரமாயிரம் இன்ப நிழற்படங்கள்.இன்பங்கள் மட்டும் தான் பதிவானது என்றில்லை.துன்பியலை தணிக்கைசெய்து பதிவிடுகிறேன். தெருமுனையில் தேநீர்க்கடை மறைவில் சுருள் சுருளாய் புகைவிடும் விடலைகளின் அவசரம் கலந்த அந்தஅனுபவிப்பு கூட இதழோர  புன்னகையை சுண்டி விடுகிறது.
பேருந்து சீராய் நகர்கிறது.காட்சிப்புலங்களும் அதன் பால் நினைவுகளும் சீரின்றி ஆர்முடுகலாய் அமர்முடுகலாய் இந்த பயணத்தில் சுவாரஸ்யம் கூட்டுகிறது.

''அன்றொரு மழை பயணத்தில் உன் மார்போடு சரிந்திருந்தேன் என் அன்பே!!!அது சுகம்! அதே மழை, அதே பாடல் அதே இருக்கை.ஆனால்  மரித்திருக்கிறேன் உயிரே,அருகில் நீ இல்லை''

 இப்படியாய் தொடர்கின்ற வரிகளில் நிறைந்திருந்தது சில கண்ணீர்த்துளியின் அடர்த்தி.அந்த வலிகளை உள்வாங்கி அவளுக்காய் சேர்ந்து அழுகிறேன்.இப்போது மழையும் கூட அழுகிறது.

 மழை இது வானத்தின் தூது.பூமியின் பிரசவம்.இடையில் அந்தரத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறேன் இந்த பேருந்து பிரயாணம்.மழைப்பிரசங்கம் கேட்டபடி புனிதயாத்திரை ஒன்றில் ஊர்வலம் போவதாய் தோன்றுகிறது.கன்னியொருத்தி கன்னங்களில் பவ்வியமாய் ஒட்டிக்கொண்ட பருவப்பருக்கள் போல கண்ணாடி எங்கும் தண்ணீர்த்தூறல்கள்.அதில் அதில் அவசரமாய் வந்தமர்ந்த பட்டாம்பூச்சி.கலைக்கவும் மனமின்றி,காத்திருக்கவும் பொறுமையின்றி சலித்து கொள்கையில் பறந்துபோகிறது பட்டாம்பூச்சி.என் சுவாசம் சுட்டுவிட்டது போலும்.கூடவே பன்னீராய் தெறித்துப்போகிறது அதன் சிறகுத்துளிகள்.

மெல்லிசையாய் வானவில்லாய் சேர்த்து வைக்கிறேன் இந்த அனுபவத்தை.கைக்குட்டையில் கூட இன்னும் சிந்திக்கொண்டிருக்கிறது பணயத்தின் சாரல்கள்.

சொந்தங்களே மழைப்பயணங்களை ரசித்திருப்பீர்கள் ஏற்கனவே,இன்னொருமுறை இன்னுமொருமுறை அனுபவியுங்கள்.பருவங்கள் தங்த பரிசுகள் தான் கார்காலங்கள்.இதையும் சேர்த்தே காதலிப்போம்.

நேசங்களுடன்
அ-தி-ய-யா.





.


Saturday, November 2, 2013

இருதயத் தாள்கள் இப்படியாய்..!



என் முதல் எழுத்துக் குழந்தைகளை
பிரசவித்த பால்ய வயதின் எல்லைகளில்
மீண்டும் ஒரு முறை சீருடை அணிந்துகொள்கிறேன்.
எழுத்துக்கள் பருவமடையாத அந்தப் பராயங்களில்
நீல நோட்டொன்றின் நடுப்பகுதியிலும்
நாட்குறிப்பேட்டின் பிடரிகளிலும் நான் போட்ட விதைகள்;
இருட்டோடு உறங்கியிருந்தால்
இன்று சூன்யமாகவே முடிந்திருப்பேன்.
காலம் தந்த உஷ்ணத்தின் அகோரங்கள,;
கருக விட்டுவிடாத நேசத்தின் நீர்த்தூறல்கள்,
வலிந்து உள்ளெடுத்த சுவாசங்கள,;
இப்படித்தான் வேர்விட்டு விரல் 
நீட்டியது என் கவிதைப்பிள்ளை!



பால்யம் பருவமாய் திரண்ட காலங்களில்
உணர்வுக்கெஞ்சலும் அறிவுக்குழப்பமும்
முகம் திருப்பிய 
முரண்பட்டு பொழுதுகளிலெல்லாம்
ஷாத்வீகமாய் என் கவிதைக்குழந்தைகளை 
அணைந்து உறங்கியதுண்டு
அந்த நாள் வெறுமைகளின் கனத்தி;ற்கு -என் 
எழுத்துக்களின் அடர்த்தியே சாட்சி!

சபைகளை தனிமையாக்கி,தனிமைகளில் சபை விரித்து
நிலைமாற்றக்கொள்கைக்குள் என்னைவசியம் 
செய்ததும் சில எரியும் எழுத்துக்களே!
வார்த்தைகள் வசப்பட்ட சில பொழுதுகளில்
பெருமிதமாய் என் ராஜ்யத்தில் கொலு கொண்டிருக்கிறேன்.
அது சிம்மாசனமாய் இல்லாத போதும்
நானே செதுக்கிய நாற்காலி என்பதால் 
நிமிர்ந்தே உட்காந்திருக்கிறேன்.

இப்போதும் 
மயிலிறகுகளை பொறுக்கும் சிறு பையனைப்போல
சிதறவிட்ட காகிதங்களையெல்லாம்
பவ்வியமாய் சேகரித்துக்கொண்டிருக்கிறேன்.
தாள் தடவியபடியே கணக்குப்பார்க்கிறேன்-நான்
தாண்டி வந்த காட்டாறுகள் எத்தனை என்று..!

நேசங்களுடன்
அ-தி-ச-யா



Saturday, July 20, 2013

வெள்ளைப் பகலொன்று...!



வெள்ளைச் சுவர்களால் அலங்கரித்த புகையிரதமொன்றில் 

நகர்ந்துகொண்டிருக்கிறேன்.

தொலையிலிருந்து வெளிர் நீல இறகொன்று மிதந்து வருகிறது.

ஆங்காங்கே இருந்த இரத்க்கறைகளையெல்லாம் துடைத்துவிட்டு

வெள்ளை பூசிப்போகிறது..!

ஒருக்களி;த்து அமர்ந்திருக்கிறேன்-என்

உச்சியில் இறங்கிய இறகொன்று வேர்விட்டு

கேசக்கான்கள் வழி என்னுள் முளைக்கத்தொடங்குகிறது

வெள்ளைப்பூப்பூக்கும் ஒருநேசாவரமாய்.!

இப்படியாய் ஒவ்வோர் இறகுகளும் இந்த ரயில் பணயத்தில்

இணைந்து கொள்கின்றன.

இப்போது கத்தி இல்லை ,ரத்தம் இல்லை

கசிந்து கொண்டிருக்கும் இசையொன்றில்

கரைந்து வருகிறது பல இதயத்தின் இராகங்கள்...!

நிச்சயமாய் நம்புகிறேன்..       

விடை பெறப்போகும் கடைசிப் பகல் ஒன்றில் இந்த தேசமே

வெள்ளையாய் மாறும்!

இதயத்தின் இராகங்கள் எதிரொலித்தபடியே இருக்கும்

அப்போது நான் கையசைத்து விடைபெறுவேன்..>

சொந்தக்காரியாய்..!

தேசக்கொடிஅல்ல-நேசத்தின் கொடியொன்று அன்று வழிநடத்தும்

மானிடத்தின் சந்தோச ஊர்வலங்களை..!

நேச மரங்களை சுமக்கும் மானிடத்தின் செடியெல்லாம்

வெள்ளையாய் பூப்பூக்கும்-அதில்   

கனிந்து கொண்டிருக்கும் விடுதலையின் விதைகள்.!

md;Gld;
-mjprah-

Wednesday, June 26, 2013

காற்றுக்காதலே!!!!

நிறைந்த காற்றுவெளி ஒன்றில் ஈரமான நினைவுகளை 
நெருக்கி அணைத்தபடி தனியே செல்கிறேன்
தூரமாய் ஓர் காற்றில் உன்வாசம் நாசிகளை கடக்கிறது
ஆகாயம் கொஞ்சம் வாங்கி நீ உடுத்திக்கொள்கிறாய்
இப்போ செதுக்கத்தொடங்குகிறேன் உன்னை....
ஆகாயக்கட்டி ஒன்றாய் திரளத்தொடங்குகிறாய்;...!

இந்தத் தூர வழிச்சாலையெங்கும் வழிகாட்டி மரமாய்
நீ தான் முளைத்திருக்கிறாய்.
வெயில் குடித்து வியர்த்த தார்க்குமிழியில்
எல்லாம் கானல் நீராய் நீ நிரம்பியிருக்கிறாய்....!
நான் கடக்கும் போது மதுரமாய் ஓர் மழை துமிக்கிறாய்...!

யார் கண்ணிலும் தெரிவதில்லை  நீ....!
நீ இருப்பதெல்லாம் காற்றோடு..
உயிர் என்கிறேன்....உயிருக்கேது உருவம்?P??
ஆதலால் தான் உயிர் என்கிறேன்.

கல்லில் மட்டுமல்ல...!
காற்றில் தான் அதீதமாய் உன்னைசெதுக்கியதுண்டு.!

வானமும் வற்றுவதில்லை,
காற்றும் முடிவதில்லை,
முடிலிவிச் சிற்பி நான்,முடிந்துபோகாமல் செதுக்குவேன்.
நீயும் கூடவே வருவாய் என் காற்றுக்காதலனாய்.....!

சில கார் காலத்தின் மழைவிழுதுகளுக்கிடையில்
தான் அடிக்கடி உன்னைக்கண்டிருக்கிறேன்..
இன்னும் ஈரம்  சொட்டியபடிதான் இருக்கிறது என் கைக்குட்டை


உன்னை செதுக்குவதில் களைப்பில்லை எனக்கு
நீலநதியில் மிதந்தபடியே நிரவு பார்ப்பது போல்
இதமாகவே நீள்கிறது இந்தநிமிடங்கள்.!

நுரைக்க நுரைக்க ஓடும் 
அவசரத்தின் சாலைகளில்
விரும்பியேதொலைந்திருக்கிறேன்-என்சிற்பக்காடுகளில்.-அங்கு
கசியும் ஒளிப்பொட்டின் தெய்வீகங்களில்
பரவசம் கண்டதுண்டு.....!
தீராத என் தவத்தின் சாயல் நீ என்பதால்....!

Wednesday, September 12, 2012

விடை கேட்டு வருகிறேன்,வாசல் திறவுங்களே...!


விடை  கேட்டு 
விரல் அசைத்து
விலகப்போகிறேன்.-வாசல் திறவுங்கள்.

நான் "அதிசயா"-"மழை கழுவிய பூக்கள்"  தான் விலாசம்.
அன்றொரு நாள் பொறி ஒன்று விழுந்த வேகத்தில் எம்பிப்பறந்தவள்
அதனால் தான் வானங்கள் எனக்கும் வசப்பட்டது,
வார்த்தைகள் வரிக்குள் சிறைப்பட்து.
அறிந்திரா முகங்களோடு அணுஅணுவாய் நெருங்கி
சொந்தமென்று தேர்ந்துகொண்டேன.
சேர்த்துக்கொண்டீர்.

இதுவரை இங்கு வாழ்ந்தது மெய்தான்-இனியும் 
வாழ்வேன்  சிறு இடைவெளியின்  பின்
அதுவரை
நான் போகிறேன்..... சாகிறேன்.......!
மூன்று திங்கள் முடிந்து விட்டால் மறுபடியும் 
மூச்சிரைக்க ஓடி வருவேன்.
அன்று
முத்தங்கள் நான் கேட்கவில்லை
முகங்களையாவது காட்டுங்கள்.

இருபதுகளில் இன்னொரு முறை 
இங்கு நான் பிறந்ததால்
ஒழுகிவிடாத உறவொன்றை 
உயிர்கரையில் உணர்கிறேன்.
இவ்விடத்தை மிகவே சிநேகிக்கிறேன்.
இப்படியே என் பொழுதுகளை நீட்டி விடவே வாஞ்சிக்கிறேன்.

நின்றுவிடாமல் என்னை நிரப்பிய நேசத்தூறல்களே
ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!!
 (http://athisaya.blogspot.com/2012/07/blog-post_16.html)
நிலவொன்றில் நனைந்தபடி
இரவின் உபாசகியாய்
ரம்மியமான பொழுதொன்றில் இதை எழுதினேன்....!

 இன்னும் சொல்லுவேன் சத்தமாய்
 (http://athisaya.blogspot.com/2012/08/blog-post_17.html)
என்னை மிகவே பலவீனமாக்கி
விரட்டி அடித்து பின்
பேராற்றலாய் பெருங்கடலாய் என்னுள் தைரிய்ம்விதைத்த பதிவு..!

இப்படியாய் இங்கு ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொன்றாய் பின்னணிகள்..
தப்பான தாளமிட்டும் 
நேரம்பிந்தி மேடையேறியும்
சபைமரியாதையில் குறைவிட்டும் தவறியிருக்கிறேன்.
என் பிரிதலின் பொருட்டு 
என்னை மன்னித்து விடுக நேசங்களே!!.
அதிசயாவை அங்கீகரித்த 
என் உலகின் அதிசயங்கள் நீங்கள்.

பலமான காற்று ஒன்றில் 
அவசியமாய் அசைக்கப்படுவதால்
மிதந்து கொண்டிருக்கிறேன் அமைதிவெளி 
ஒன்றை நோக்கி...,
கொஞ்சம் கண்ணீரும் 
மிகுதி பாரமுமாகி விடை கேட்கிறேன்.
இது முடிவல்ல தொடக்கம் தான்
ஆயிரம் சொல்லை ஆதாயம் என்று ஆக்கினாலும்
 "சொந்தம்" என்பதில் ஏதோ சுகம் சுகிக்கிறேன்.

"நான்"
முடிந்த பின்னும் இங்கு தான் வாழ்வேன்.
வேர்வழி வெளிச்சத்துகளாகி
மீண்டும்
ஒளிப்பூக்களோடு உங்கள்
வாசல்களில் வருவேன்.
வரிசைப்படுத்த இயலாத என் சொந்தங்களே
இன்று தள்ளி நின்று அழுது பார்க்கிறேன்.
பொழுதுகள் பூப்பெய்தும் அந்தி ஒன்றில' வருவேன்
விருந்தாளியாய் அல்ல 
உரிமைக்காரியாய்..
கேட்டுவிடாதீர் யார் நீ என்று.

நேசங்களை நினைவுகளில் சுமந்து
பயணப்படுகிறேன்.
மலைகளில்  மூச்சி முட்டி திரும்பும் கணங்களிலெல்லாம்
நிறைத்துக்கொள்கிறேன் இந்த நாள் நேசங்களை எனக்காய்..!

சின்ன விரலை உதற மறுக்கும் குழந்தையாய் மனம் 
இங்கேயே நிற்கிறது.
பலவந்தமாய்  பக்குவமாய் விரல் விலக்குகிறேன்..!
ஒற்றைப்புன்னகையோடு தலைதடவுங்கள்.
நிம்மதியாய் போகிறேன்-நான்
உங்கள் சொந்தம் அதிசயா...!


உயிர்பூக்களெல்லாம் இதோ கடைசிமுறையாய் மெதுமெதுவாய் விரிகின்றன..காலையின் நான் காற்றாகி போய்விடுவேன்.காலப்பெருவெளியில் எங்கெல்லாம் காடுகள் விரிகின்றனவோ,எவ்விடமெல்லாம் வெளிச்சங்களால் குளிக்கிறதோ ,அங்கே தான் நனைந்துகொண்டே இந்த ஆன்மா கரைந்திருக்கும்.!!!










என் கல்வித்தேவைக்காய் வேற்றிடம் செல்லவிருப்பதால் சில காலம் பிரிவை அனுமதித்துள்ளேன்.மீண்டும் சந்திக்கும் பொழுதுகளிற்காய் காத்திருக்கிறேன்.சந்திப்போம்என் இனிய சொந்தங்களே!!!!!!

(ஹரி,சீனு ரெண்டு பேரும், விளையாடுறதுகக்கு வேற பொம்மை ஒன்று வாங்கிடுங்க.:)





அன்புடன்
-அதிசயா-
Related Posts Plugin for WordPress, Blogger...