Friday, August 1, 2014

கோடை விடுமுறையும் தாயகத்தின் ஏக்கங்களும்



வணக்கம் சொந்தங்களே.!

பனி தேசங்களில் கோடை விடுமுறை ஆரம்பமாகிவிட்டது…இப்போதெல்லாம் தாயகத்தின் காலநிலை வருடம்பூராகவும் தகிப்பாகவும் வரட்சியாகவும் இருந்தாலும்சொந்தங்களின் வருகையால் பல மனங்களில் வசந்தம் தற்காலிகப்பூச்சொரியஆரம்பித்து விட்டது.

திருமண வைபவங்கள் ,ஆலயத்தின் பெருந்திருவிழாக்கள் ,மஞ்சள் மணக்கும் புனித நீராட்டுதல்கள் ,புன்னகையோடு சேர்த்தே பொன்னகைக்கான முதலீடுகள் இன்னும் குளிருட்டிய வாகனங்கள் ,போத்தல் தண்ணீர்,சுற்றுலா மையங்கள்,நாகரீக அலைபேசிகள் .இவை தான்  இப்போது இங்கு அதிகம் கலந்துரையாடப்படும் தலைப்புகள்.போர் தின்றது போக நெஞ்சில் மிஞ்சியிருக்கும் இனிப்புக்களை கிண்டியெடுத்து அசைபோட்டுக்கொள்கிறது தாயகத்தின் முதல் தலைமுறை.ஆரத்தழுவி அந்தநாள் கதைபேசி முற்றத்து பிலாமரத்தில் பழம் புடுங்கி இன்னும் நாச்சார வீட்டில் அந்த நிலவுகளை தரிசித்துக்கொண்டிருக்கிறது.இது நம்மவர் கதை.

எனில் புலம்பெயர் தேசத்திலிருந்து வந்த இரண்டாம் தலைமுறை அதாவது இன்றையையும் முந்தையதைக்கும் இடைப்பட்டதான பொது தலைமுறை எப்படி???.குளிர்தேசத்தில; அடைகாத்த குஞ்சுகளை கொண்டு தாய்பறவையிடம் வரும் பிள்ளை பறவை போன்ற  மனநிலை.ஆனால் .இருதலை கொள்ளி எறும்பு நிலை.முற்றிலும் நாகரிகமெனப்படும் அவசரங்களோடும் அதீத அறிவோடும் இருக்கும்தொழில்நுட்பக்குழந்தைகளுக்கும் அரைத்து வைத்த காரக்குழம்போடு ம் அதிகாலை குளியலிடும் நம் பாட்டிகளுக்கும் இடையில் இங்கு வந்தபின் சமரசம் உண்டாக்குவதில் சோர்ந்து போகின்றனர்.பல தடவைகளில் தோற்றும்போகின்றனர்.
பனிதேசத்து பிள்ளைகளுக்கு இந்த மிதமிஞ்சிய வெயில் ,இறுகஅணைக்கும் மனித சூடுகள்,மீண்டும் மீண்டும் கேட்கும் விசாரிப்புக்கள்,”குஞ்சு,ராசா,பிள்ள,ராசாத்தி”போன்றகொஞ்சல்கள்,சுக்குக்கோப்பி எல்லாம் பல சமயங்களில் எரிச்சல் மூட்டிவிடுகிறது இந்த வரண்ட பூமியின் வெயிலை போலவே.

தாயகத்தின் நடைமுறைச்சந்நதியின் பிள்ளைகள் எது நிஐம் என்று புரியாத குழப்பத்தில்.ஈழத்தின் வளர்ப்பு முறை இங்கு வாய்த்த வசதிகள்,இங்கு பயன்பாட்டிலுள்ள நியாயங்கள் தரம்கெட்டதா என தலையைப்பிய்த்து பார்க்கிறார்கள்.வயதொத்த இரு தேசத்தின் பிள்ளைகளுக்கிடையான உரையாடல்கள் நாளாக நாளாக நெருக்கத்தை இளக்கிறது.ஏதோவொரு தாழ்வுச்சிக்கலையும் குற்ற உணர்வையும் நாசூக்காக விதைக்கிறது.நம்மவர் மனதில் தாயகக்கனவுகள் அமிழ்ந்து போக பனித்தேசம் பற்றியதான அதீத மோகம் மேலெழுகிறது.இங்கு பிறந்தது விதியின் சாபமென எண்ணிக்கொள்கிறார்கள்.

பெரும்பாலும் மேல்தட்டு வர்க்கத்தை  விடவும’ அந்தரத்தில் இருந்து கொண்டு ஏதோ ஒரு மையம் பற்றி ஊசலாடுவது தாயகத்தின் நடுத்தட்டு இளையோரே.இவர்கள் தான் இருவகைப்பட்ட கண்ணியத்தின் இடைவெளிகளில் மாட்டிக்கொண்டு முளிக்கும் துர்ப்பாக்கியர்கள்.
மிச்சமிருக்கின்ற தாயகத்தின் சுவடுகளையேனும் காப்பாற்றி அதில் கரையேற வேண்டுமென்ற தீராவேசம் ஒருபுறம்.நாமென்ன நாகரிகத்திலும் அறிவிலும் சளைத்தவர்களா என்ற கோபம் மறுபுறம் இவர்களிடம்.எனில் என்ன செய்கிறார்கள்.??

உடனடிச் சமாதானங்களுக்கு வர இவர்களால் முடிவதில்லை.காத்திரமான பின்னணிகொண்ட குடும்பத்தின் இளையவாரிசுகளென கொஞ்சப்படும் குளிர்தேசத்து பிள்ளைகளின் ஆடைஅலங்காரங்கள் ..உணவுமுறை….இலகுவில் வரமறுக்கும் தாய்மொழி,பல்தேசியக்கம்பனி வாசல்களிலும் நாகரிக சந்தைத்தொகுதிகளிலும் என பிரத்தியேகமா அவர்கள் பேசிக்கொள்ளும் தமிழ் அல்லாத மாற்று மொழிகள் இவையெல்லாம் தாயகத்தின் இளையோரிடம் ஏதொவொரு வெறுப்புணர்வை கிளறிப்போவது தாயகத்தில் இன்னும் சாகாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் நான் கண்ட உண்மை.

ஆக கோடைவிடுமுறை காலத்திலும் சரி எப்போதேனும் சரி தாயகம் வரும் நம் சொந்தங்களுக்கு இனிப்புக்களை மட்டுமே எப்போதும் பரிசளிக்க விரும்புகிறோம்.எத்தேசம் வாழ்ந்தாலும் பூர்வீகம்  நம் ஈழம் தானே.நட்சத்திரங்களும் வான்பரப்பும் வேறுபட்டாலும் கூரையும் நிலவும் ஒன்று தானே.

இத்தேசம் இப்போது காடும் கரம்பையுமாய் இருந்தாலும் நேசங்களை அணைக்கும் போதெல்லாம்  நெஞ்சுருகி மாரி பொழிகிறது.தூரதேசத்தின் சொந்தங்களே இவ்விடமிருந்து உம் மகவுக்கு ஒப்பாகி நானும் ஓர் கோரிக்கை வைக்கிறேன்.நீ
ங்கள் உழுத புழுதிக்காடுகளில் தான் எங்களை இளமையை இன்னும் விதைத்துக்கொண்டிருக்கிறோம்.எங்கள் பொழுதுபோக்கு விடுமுறை எல்லாமே இப்போது வரைக்கும் இந்த வெயில் தேசத்தின் எல்லைக்குள் தான்.இந்தக்கைகளுக்கு தட்டச்சு செய்யவும் தெரியும் தழும்புகள் தாங்கவும் அறியும்.பொருளாதாரம் நெருக்க நைந்து நைந்து நாகரீக ஒட்டத்தில்  சரிநிகராய் ஓட முனைகிறோம் கண்ணியங்களோடு.இந்த வஞ்சனை அரசியலிலும் நீங்கள் வாழ முடியாது என்று உதறி ஓடிய தீவினுள் கௌரவமான வாழ்வொன்றிற்று உரிமை கோரவே சாகமல் போராடுகிறோம்,இன்னும் விருந்தாளிகளாய் மட்டுமே நீங்கள் வரத்துணியும் இக்காடுகளில் நேர்ந்துவிட்டதை போல் வாழ்கிறோம்கஞ்சியிட்டதை போன்ற டொலர் மடிப்புகளை விட நைந்து கசங்கிய ருபாக்கள் சிலதருயங்களில் எம்மை கௌரவமாய் நடத்துகின’’றன.இப்படியாய் தான் ஈழத்தின் இளையோரின் தன்னிலை விளக்கமிருக்கும்.

ஆக ஒருதாயின் இருமகவுகளுக்கிடையான ஈடேற்றத்தையும் புரிதலையும் பற்றியே இத்தருணத்தில் பேசுகிறேன்.இருபதுகளிலன் ஆரம்பத்தில் வாழும் ஒரு சராசரி அவதானியாய் கேட்டுக்கொள்வது யாதெனில் புலம்பெயர் தேசத்தின் பெற்றோரேஇங்கு வருவதாயினும் இல்லையெனினும் ஈழம் பற்றிய கண்ணியங்கள் இங்கிருக்கும் நடைமுறை நிஜங்கள்,நடந்தேறிய கொடுரக்கதைகள்.இதன் காலநிலை பாரம்பரியம் அனைத்தையும் செல்ல நாய்க்கு பிஸ்கட் வாங்கும் கடை ஓரங்களில் வைத்தேனும் சொல்லுங்கள்.அழகிய கற்பிதங்களை பெற்றுக்கொள்ளவும் உருகும் பாசங்களில் ஓட்டிக்கொள்ளவுமே வெள்ளை மனங்கள் விரும்பும்.எம் மொழிபெயர்ப்புகள் உம் தேசம் வருவது தாமதமாகும்.அதற்காயேனும் நீங்கள் சொல்லுங்கள்.

இன்னும் திண்ணை உடைக்காத வீடுகளிலும்,முற்றத்த மர நிழலிலும் பேராண்டிக்காய் பலகாரம் சுடும் அப்பத்தாக்களும் மச்சானின் வருகைக்காய் மருதாணி போட்டுக்கொண்ட முறைப்பெண்களும் மஞ்சள்பூவரசின் மங்கலங்களும் நாடித்துடிப்போடு இங்கே சீவித்துக்கொண்டேயிருக்கின்றன.


ப்ரியங்களுடன்
அ-தி-ச-யா



Monday, June 23, 2014

#காதலனுக்காய் அல்ல ..காதலுக்காய் மட்டும்

எனதன்பே..
நீள் பாதையில் நனைந்தபடி பயணப்பட்டிருந்தேன்..!
இக்கடல் பாதையில்
வளையங்களை தோன்றச்செய்கிறாய் நீ..
வெறுங்காற்றை தான் உயிர் என்று நிரப்பியிருந்தேன்-என் காவலனே
பெருங்காற்றில் தான் மீண்டுமொரு உயிர்பெறுகிறேன்..
இது பளிங்குக்கனவுகளையும்
ஆதிக்காதலையும் ஒத்திருக்கிறது.

பெரும் துடுப்பு ஒன்றை வலித்தபடியே
நிதானப்புன்னகையை என் திசை நோக்கி விரித்துவிடுகிறாய்.
இப்போது இரு கைகைளையும் அகல விரித்து
என் தேசத்திற்குள் உனை நிரப்புகிறேன்.

ஈரத்தின் துணிக்கைகளில் ஒவ்வொன்றிலும்
உன் காதலின் தூறல் சொட்டிக்கொண்டிருக்கிறது..!
இதுவரையும் உன்னை அணைத்துக்கொள்ளவில்லை.
கண்ணியத்தின் இந்த இடைவெளிகளையும்
அணுவும் மீதமின்றி காதல் காதல் காதலே நிறைத்திருக்கிறது..!

இடது தோளில் உன் பயத்தின்தவிப்புக்களையும்
அதன் கேசங்களில்
என் நியாயத்தின் தீர்த்தங்களையும் பரிமாறிக்கொண்டிருக்கிறேன்..!

நீல நதி இது நிலவில் குளிப்பது போல்
இவ் ஓடம் முழுவதுமாய் கரைந்திருக்கிறது உலகக்காதலின்
இரகசிய கண்ணீர்..
இதுவரையும் நிதானப்புன்னகையை மட்டுமே வெளிப்படுத்துகிறாய்
காதலே..!

மயிர்க்கான்களில் ஒட்டிக் கொள'கிறாய் என்காதலே..!
நுரையும் கரையும் தொட்டுக்கொள்ளும் இடைவெளிகளில்
நாற்காலி ஒன்று அமைத்துக்கொள்வோம்..!

..

எனக்காய் ஒரு கிளிஞ்சல் மட்டும் பத்திரப்படுத்தி வை.
ஏகாந்த பயணத்தின் இரவு
ஒன்றில் மீண்டும் உனக்கான படகை அனுப்புவேன்..

பின்னொருநாளில் நரைத்த என் காலங்களில்
அக்கிளிஞ்சல் கொண்டு ஏதேனும் தோற்றம் உண்டாக்கு.
காதோரத்து வெள்ளிக்கம்பியில் கூட முன்னைநாள்
ஊஞ்சல்களின் தடம் இருக்கும்.
ஒருவேளை நம் காதல் அன்று அவ்விடத்தில்
மீண்டும் பிள்ளைப்பயணம் புறப்படலாம்.

நீ அறிந்திருப்பாயா...
ஜிப்ரானின் காதலி கூட ஒரு காலத்தில் ஏகாந்த பயணியாக இருந்திருப்பாள்.

நான் இனி தனிப்பயணம் போய் வருகிறேன்.-அதுவரை
நம் காதல்
வளர்ந்து நனைந்திருக்கும் பெருவெளியில் உட்கார்ந்திரு

#காதலனுக்காய் அல்ல ..காதலுக்காய் மட்டும்

Tuesday, June 10, 2014

நான் நூலாகிக்கொண்டிருந்தேன்-நீண்ட மொழிபெயர்ப்பிற்காய்



.....................................................................................................................

இருள் கரு நின்று புறந்தள்ளப்பட்ட
பச்சிளம் புலர்வொன்றில் நான் நூலாகிக்கொண்டிருந்தேன்.

நெடிந்து விரிந்த முன்னைநாள்சோகம் ஒன்றை
மீள்நிரப்பி அதற்காய் வருந்திக்கொண்டிருக்கையில்...
சமாதானம் எதைனையுமே முன்னிறுத்தாமல்
முற்றுமாய் ஆழ அனுபவிக்கிறேன்..
உயிர் வலி இது என...!

பேருந்தேசத்து ராஐ◌ாக்களே
இப்போது உம்மைப்பற்றிய உயர்வுநவிற்சிகள் புனையேன்..
சேனாதிபதிகளே உம் ஈட்டி வெளிச்சங்களுக்கு சூரியத்தேரினை அழைப்பதாயுமில்லை..
சருகுப்பூமி ஒன்றில் சுதந்திர நிலவு குடிக்கிறேன்..
இப்பொழுதில் நான் நானாவே...!

இந்நிலையில் என்இயலாமையின் பக்கங்களுக்கு
வெளிச்சம் பூசுகிறேன்.
ரகசியமான தோல்விகளை ஒப்புக்கொள்கிறேன்..
அப்பா எனக்கும்
எனக்கும் ஓர் காதல் இருந்திருக்கக்கூடும்.

தேநீர்ப்பொழுதுகளில் மிதந்திருந்த தனிமைகளையும்
நெடும் பணயத்தில் எனக்குள்கேட்ட புல்லங்குழல் கீதத்தையும்
விட்டு விட்டு கட்டி பட்ட இருதயத்து ஈரங்களையும்
உங்களிடம்தருகிறேன்.

பேசாப்பொருள் பற்றி என்னோடு விவாதிக்க விரும்புகிறேன்.
விலைமகளின் கண்ணியங்கள் பற்றியதாய்..
தழுவுதல்களுக்குள் இருக்க்கூடிய காமம் பற்றியதாய்..
கோமாளிபொருவன் சுமக்கின்ற பெருங்கண்ணீரைப்பற்றியதாய்..
பிரம்மச்சாரிகள் நடுங்குதல்கள் பற்றியதாயேனும்..

என்அகத்தினுள் உள்ள திருடனை தண்டியுங்கள்.
சிந்தனை திருடனாய்
கனவுகளின் திருடனாய்
ரகசியங்களின் திருடனாய்
எப்படியேனும் உம்மிடம் எதையேனும்திருடியிருந்தால் தண்டியுங்கள்.

வன்முறை பற்றியும் சொல்லியாக வேண்டும்.
உள்ளே ஒருவேள்வி வளர்ந்திருந்தது-அது
முற்றுமே வன்முறையை பற்றியிருந்தது..
நான் எரித்தலை விரும்பினேன்..
முன்வரிசைப்போர் வீரனாய் சூறையாடல்களை எதிர்நோக்கி காத்திருந்தேன்.
இக்கலவர காரியை கைது செய்வாயினும் சம்மதமே..

இனி நான் ஒளித்துகள் பிடித்தபடி விண்மீன் தேசம்
செல்லப்போகிறேன்..
அட்டைப்படம் ஒன்றில் இக்காட்சியை பொறித்திடுக.

இப்புறப்பாடுகளிலும் மீண்டும் வந்திறங்கலிலும்
எவர்செல்வாக்குமிருக்கவில்லை.
இக்குளிருக்கு தேநீர்கதகதப்போ
மனித வெப்பங்களோ தேவைப்படவில்லை.

மர மறைவில் நின்றுகல்லு வீசாதீர்.
சோலை சுகந்தங்களை விடவும் கல்லெறிதல்களை நேசிப்பேன்.-அது கண்ணெதிரில் நிகழ்தப்பட்டால்..

இக்கணத்தில் தள்ளி நின்று எனைப்பார்கிறேன்..
நானெனும் என் பிரதி இப்போது அடர்தியாய' இருக்கிறாள் சலனமற்று.

இப்படியாய் சிலபின்னிரவுகளில்
நான் குற்றஅறிக்கை செய்து கொள்கிறேன்..
எனை நானாகவே சந்தித்துக்கொள்கிறேன்.

நீண்டதாயினும் இது நிர்மலமானது.
இப்பாத்திரத்தில் மதுவை ஊற்றுங்கள்
பாலையும் ஊற்றுங்கள்..
கண்ணீரையும் நிரப்புங்கள்..
எதுவானாலும் ஒற்றை இயல்பை மட்டுமே எனக்காக்கிக்கொள்வேன்.

இவ்விரவில் மிக நேர்தியாக எனை பதித்துக்கொண்டிருக்கிறேன்.
நான் நுலாகிக்கொண்டிருக்கிறேன்..
எண்ணப்படி இதனை மொழிபெயத்துக். கொள்ளுங்கள்.
ஆனால் அதிகம் இரைச்சல் எழுப்பாதீர்கள்.

நான் மௌனங்களைளே மொழிபெயர்க்க காத்திருந்தேன்.

-அதிசயா-

Wednesday, June 4, 2014

அவமானங்களை கொண்டாடுகிறேன்...!



தரிப்புகள் எது என்று தீர்கமாக தெரியாத தள்ளாட்ட பயணம் ஒன்றின் தளம்பல் படகோட்டிகள் நாங்கள்.பேரலைகளை கண்டு திகைத்தாலும் ஏதோ பிடிமானத்தை பற்றியபடி தூரத்தெரியும் சிகரம் ஒன்றிற்கான தேசம் பற்றி வலிந்தேனும் பயணிது சில தேசங்களை  வென்றுவிடுகிறோம்.

வெற்றியின் அடையாளதாரர்களாக நாம் இருந்தாலும் அக்கிரீடத்தின் உரிமைகளை பலபேருடன் பங்கிட்டுக்கொள்கிறோம்.'உன்னால் தான்...உனக்காகவே தான்..'இப்படியான் அறிக்கைப்படுத்துகிறோம்...'

ஒத்துக்கொள்ள மாட்டேன்.சில நேசங்கள் நெருக்கங்கள் வெற்றிக்கான  தொடக்கமாக இருப்பினும் நாள்பட்ட தோல்வியின் நெருடல்களும் அவமானம் கீறிப்போன பெருங்காயமும் எக் கிரீடங்களுக்கான பங்காளிகள் என்பேன்.அதற்காக  நேசிக்கிறேன்.

காத்திருந்து கண்வலித்து சித்தம் உக்க சிந்தனை வயப்பட்டே பல தேசங்களை கடந்திருக்கிறேன்..துடுப்பு வலிப்புகளின் போது இரு காதுகளை இறுக பொத்திக்கொள்வதற்காக பல தடவை துடுப்பை கைநெகிழ்ததுண்டு.படகோட்டி மாவீரன் வருவான் என்று கரை பார்த்து கண்கசிவதை விட என் கடல் பெருங்கடலாயினும் சுய பயணத்திற்கான  தீர்மானங்களுடன் நுரை தொட்டு நீந்திப்பார்த்தேன்.கடல் கோபமாயிருந்தாலும் அடத்தியில் நிதானம் புரிந்தது.

எல்லாக்கணங்களும் அதீத சிரத்தையுடன் நகர்த்தப்பட்டாலும் பேரலையாய்..பேய்ப்புயலாய் இந்த தோல்விகள் துரத்தும்.
வெள்ளி அலையில் துள்ளி விழும் மீனினம் போல இந்த வாழ்வும் அவ்வப்போது ஆனந்த நர்த்தனம் புரிகிறது.

தொலைதூர பயணி முகவரிஅற்ற சத்திரத்தில் இதமாய் ஓய்வெடுத்து மீண்டெழுவது போல இன்னதென்று அறியப்பாட இந்த நர்த்தனங்களின் மடியில் கையணைத்து
 இளைப்பாறியதுண்டு.
சமர்ப்பணங்கள் தாண்டிய தேசங்களையே நான் விரும்புகிறேன எப்போதும்.ஆனால் நன்றிகளுககும் மானசிக வணங்குதல்களுக்கும் நிச்சயம் இடம் கொடுக்கிறேன்.


 வேட்கைகாரியின் ஓர்மங்களை மிகவே ஒத்த மனோநிலை இது.கர்வம் சுமந்த துரித வேகமாயினும் நிதானங்கள் ஒருபோதும் தப்புவதில்லை.இப்பயணத்தின் எல்லைகளில் தேசங்கள் மட்டுமல்ல சில நேசங்களும்  வெல்லப்படுகின்றன.


.பெருங்கடல் கடந்து சிறு தேசம் ஒன்றை சுவீகரிக்கையில் ஒரு படைத்தளபதி போல அல்லாமல் யுவராணியாகவே எனை கண்டதுண்டு.தோல்விகளையும் கூர்கற்களையுமே என் சேனைத்தளபதிகள்.கிரீடம் சூட்டப்படும் கணங்களில் ஆகாயம் நோக்கி வெளிச்ச பாணங்களை  அனுப்புகிறேன்.அங்கிருந்து சொரியும் ஏதேனின் பூக்களோடு கொண்டாடுகிறேன் என் தோல்விகளின் வலிகளை.இங்கிருந்தே என் மகுடத்திற்கான ராஜ அலங்காரங்கள் புறப்படட்டும்.

-நேசங்களுடன் அதிசயா-

Tuesday, June 3, 2014

மழை கழுவிய பூக்கள்: நேசத்துறவு

மழை கழுவிய பூக்கள்: நேசத்துறவு: இனிமேலும் நேசத்தரிப்பிடங்கள் பற்றி நினைப்பதாயில்லை. நீண்டதாயினும் நெடுந்துயர் சுமந்ததாயினும் இதுவரையும் போலவே ஏகாந்தமாய் கடந்து...

Tuesday, May 27, 2014

நேசத்துறவு





இனிமேலும் நேசத்தரிப்பிடங்கள் பற்றி நினைப்பதாயில்லை.
நீண்டதாயினும் நெடுந்துயர் சுமந்ததாயினும்
இதுவரையும் போலவே ஏகாந்தமாய் கடந்து விடவே விரும்புகிறேன்
வரட்சி மிக்க பாலைவன பயணங்கள் அனைத்தையும்..
ஒரு போதும் முடிந்து விட்டிராத என் நேச எதிரிகளே..
அடிக்கடி போர் தொடுங்கள் என் தேசம் மீது..
முற்றுப்பெறாத இக்கிண்ணம்-நிறைந்து விடத்துடிப்பதெல்லாம்
வீரங்களால் மட்டுமே..
மட்டற்ற பெருவெள்ளம் ஒன்றில்
மரிக்கும் அந்தரங்களில் கூட
நாவு தவிப்பது போல்
எல்லா பேரானந்களின் பின்னும்
ஏதோ ஒரு சிலிர்பை உண்டாக்கி விடுங்கள்..அது
ஆத்திரமாய் அழுகையாய் ஆவேசமாய்
எப்படியாயினும்.
வடிவம் குறித்த கவலை எனக்கில்லை
வேண்டுவதெல்லாம்
ஏகாந்தங்களில் விரியும் வீரச் சுதங்திரங்களையே...!
-அதிசயா-
Related Posts Plugin for WordPress, Blogger...