Monday, July 20, 2015

அற்புதங்கள் நிறைந்த குவளைகள்-இது நமக்கான சந்திப்பு

என் ப்ரியத்திற்குரியவனே....!
இந்தப்பயணங்கள் பற்றிய குறிப்புக்களில் உன்னை இந்த இனிப்பான கிறக்கம் தருகின்ற பானங்களோடு வரைந்து வைக்கப்போகிறேன்.இத்தனை தொலைவு நடந்து விட்டேன்.பின்னும் இளைப்பாறுதல் பற்றிய எந்த எண்ணமும் தோன்றாமலிருக்கிறது என்பதை தாண்டிய சுவாரஸ்யம் ஏதுமுண்டோ.எப்போதேனும் உண்டாகக்கூடிய இந்தப்பயணத்தில் என் கூட வரும் வழிப்போக்கனே...!பெறுமதி மிக்க இந்த வாழ்க்கையின் கொண்டாட்டமான பொழுதுகள் இன்னுமாய் நீளக்கடவது.

என் அபூர்வ பிரயாணியே..!
இந்த சாலை எங்கிலும் நான் அதிகமாக அவதானித்தது சிறு பையன்களையும், அவர்களை இலாவகமாய் உருட்டிச்செல்லும் அந்த வளைய சில்லுகளையும் தான்.இப்படித்தானே இந்த சாலைகள் அதன் திசைகளின் எங்களை இயல்பாய் கூட்டிப்போகிறது.

மூன்றாவது சாலை வளையும் போது தான் நீ வெறும் வழிப்போக்கனல்ல என்பதை உணர்ந்து கொண்டேன்.அப்போது தான் அந்த இனிப்பான பூக்களை சொரியும் மரத்தடியில் அமர்ந்தபடி நேசங்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.பின்னாளில்  நீ கூட மென்மையான இதழ்களை கொண்ட மலர்தருவாக மாறியிருந்தாய் என்பதே உண்மை.பயணங்களில் இரவு பற்றிய பயங்களோ,சாத்தான்கனை விரட்டும் மந்திரங்கள் பற்றியோ அதிகமாய் நாங்கள் ஆலோசித்ததில்லை.எப்போதைக்குமான தேவ தேவன்களை உருவாக்கி அவர்களின் சிறகுகளை ஆராதித்தபடி பயணத்தை தொடர்ந்துகொண்டிருந்தோம்.

அறிவாயா ப்ரியமே....
அப்போதே நினைத்து விட்டேன் இனி உன்னை பிரயாணி என சொல்வதில்லையென.வாழ்தலை தண்டனையாக சுமந்த காலங்களிலிருந்து மீண்டு, இந்தப்பணயம் முழுவதுமாய் மிருதுவான வாழ்தல் எங்களின் கைகோர்த்து வருகிறது.இந்தப் பனிபொழுதுகளில் உன் கவிதைகளை நினைவுகூர்ந்து குளிர்காய்ந்து கொள்கிறேன்.நீயும் அப்படியேஅப்படித்தான்.
உண்மைதான் பெருத்த கனவு ஒன்றை சுமப்பது அதீத பாரமாகிறது.அதனால் தான் சிற்றெறும்பின் வெல்லக்கட்டிகள் போல் இனிப்பான சாத்தியமான குட்டிக்குட்டி கனவுகளை இந்த சாலை எங்கிலும் பின்னியபடி போகிறோம்.

ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் காட்டாறு போல நான் பாய்ந்தும் உருண்டும்போனேன்.இப்படியான பள்ளத்தாக்குகள் மென்மையாகவும் மிக விசாலமாகவும்  எங்களை இயக்குகிறது.முன்பெல்லாம் என் தோல்விகளுக்கு யாரேனும் இப்பள்ளத்தாக்குகளை உதாரணம் காட்டியிருந்தால் அத்தோல்வியை வெற்றியை காட்டிலும் பெரியதாய் கொண்டாடியிருப்பேன்.

இன்று இந்த சிகரத்தை மேவ வேண்டிய உயிர்ப்பை தந்தது அந்தப்பள்ளத்தாக்குகளே.என் பச்சைத்தோழியரோடு சேர்ந்து நானும் நீயும்எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பார் .இந்த விருந்தின் இறுதியில் நிலா மட்டும் ஒளிர்கையில் மற்றொரு புகைப்படடெடுத்து இங்கேயே மாட்டிவிட்டுப்போவோம்.சந்தோஷங்களின் சாட்சியாய்.

இப்போது இந்த உச்சியில் இருந்து கீழே பார்க்கையில் அபத்தமேதுமின்றி நீயும் நானும் நேசமாய் விரல்பிடித்து வந்த காலங்கள் கோலமாய் விரிகின்றன.ஆணென்றோ பெண்ணென்றோ தோன்றாமல் எதுவாய் இருக்க ப்ரியப்பட்டோமோஅதுவாகவே நடந'து வந்தோம்.இங்கு விரசங்கள் எதுவுமேயின்றி தனியே நேசம் என்ற ஒன்றே எங்களை நடத்தி வந்தது.குதித்தோம் காற்றின் லயத்தோடு குதித்து நடனமாடினோம்.அட்சரங்களை தியாகம் செய்து விட்டோ ஏதேதோ பாடினோம்.போதை கொண்டவர்கள் போல..

என் ப்ரியத்தின் ப்ரியமே..!இந்த இரவில் நம் இருதயத்திடமாய்  பிராத்தனை என்று சொல்லிவைப்போம்.
என் ப்ரியத்திற்குரியவனே நம் நேசத்தின் மெதுமைக்குள் நம் கைகளை ஒன்றாய் ஏந்தியபடி  சொல்வோம்....


என் இருதயமே..........!அதீத சுதந்திர வீரும்பிகளான எங்களின் பின்னைய நாட்களில்பெருத்த தனிமையோ சலிப்போ தோன்றாதிருக்கட்டும்.இந்த சாரலின் வாசங்கள் நாசிகளில் நிறையும் போதெல்லாம்எங்கிருப்பினும்  எங்களுக்குஇப்பயணங்களை நினைவுபடுத்துவாயாக.இப்போது கூட வரும் இந்த அழகிய பாதச்சுவடுகள்என்றென்றைக்குமாய் பரிபூரண அழகுறட்டும்.சூழ்ந்திருக்கும் இந்த மலைகள் சாட்சியாய்எங்களை ஆசீர்வதிப்பாயாக இதயமே...!


Wednesday, July 8, 2015

சுஜாதாவை அணுகல்-சரித்திரத்தின் சபதத்தோடு இரு காதல்



பதிவுலகின் சொந்தங்களுக்கு அதிசயாவின் அன்பான வணக்கங்கள்!
சுஜாதாவை முதல் முதலில் அணுகியிருக்கிறேன் இனி மெல்ல அவர் வார்த்தைகளின் விரல் பிடித்து அழகாய் அறிந்து கொள்வேன்.
"சுஜாதா" இந்த பெயருக்கான நேசிப்பு வட்டம் மிக விசாலமானது.ஒவ்வொருவரும் தனக்குரியவராக கொண்டாடும் இந்த ஆளுமையை அனுபவிக்க வாய்த்தஅவரது முதல் நூல் "ரத்தம் ஒரே நிறம்"
இது விமர்சனம் அல்ல என் விளக்கம் மட்டுமே.


அவரது இரண்டு சரித்தில நாவல்களில் ஒன்று இது.ஆங்கிலேய ஆட்சியில் நிஜமாய் குருதி பீறிட்ட "சிப்பாய் கலகத்தை"அதாவது ஆங்கிலேயருக்கு எதிராக கிளர்ந்த இந்திய சிப்பாய்களின் கலக வரலாற்றை ஆதாரமாக்கி கூடவே  வைராக்கியமே நிறமாகி நினைவாகி ஓடும் முத்துக்குமரன் எனும் இரும்புத் தமிழனை கதையிடை செலுத்தி ,வெள்ளெயன் மீது அவன் கொண்டதீரா வெறுப்பையும் முறுக்கேறி புடைத்த புயங்களையும் உந்துசக்தியாக்கி விறுவிறுப்பு வேகத்துடன் பின்னப்பட்டது தான் இந்த சரித்திர நாவல்.

பக்கங்களை பாய்ந்து பறந்து புரட்டா வண்ணம் எனை போல் சாமானியனையும் நிதானமாக ஓரு காதல் தைத்துப் போகிறது.தந்தையை கொன்ற வெள்ளெக்கார துரையை கொன்றே தீருவேன் என விதி செய்த சிலம்பக்காரன் முத்துவிற்கும் ,வித்தையோடு வசீகரமும் சரிவிகிதம் நிரம்பிய சொன்னால் இனிக்கும் பூஞ்சோலைக்குமாய் ஒரு காதல்.இந்தக் காதல் தான் அவனை தப்புவித்து பல தடவை ஆயுள; நீட்டியது.இறுகிய வரப்பின் மேல் ஈரம் குழைத்து ஓடும் சிறுவாணி போல்.

இன்னொரு காதல். அதை இப்படிச்சொல்வேன். இப்போதுதான் விரிந்த மல்லிகையும் அதன் இதழ் ஓரம் கசியும் பியானோ இசையும் போல.இது சீமாட்டி எமிலி மற்றும் கப்டன் ஆஷ்லி வரைந்த காதல்.மிக மிருதுவாய் ஆஷ்லி இழைத்த காதல்.இந்த மென்மைகக்குள் ஒட்டிக்கொண்ட தாமதத்தால்  கேசேராது தொலைவான துயரக்காதல்.


சுவாரஸ்யம் என்னவென்றால்எமிலி சிறைப்பட்ட தங்கச்சிறைக்கூடம் மக்கின்ஸி அதாவது முத்து கொல்லத்துடிக்கம் துரை.பலதடவை முத்துவை துரையிடமிருந்து காப்பாற்றியது எமிலியை மென்மையாய் ஸ்நேகித்த ஆஷ்லி.

சிப்பாய் கலவரத்தை அடக்க சென்னையிலிருந்து புறப்பட்ட ஆங்கிலேய மற்றும்  ஆங்கிலோ இந்தியப்படைகள். ஈற்றில் வரலாற்றின் சுவரோரம் முற்றுகையிடப்படுகையில் ஆங்கிலேய ரத்தம் ஆறானது என்றால் இந்தியக்குருதியும மற்றொரு புனலாகி விரிகிறது.முத்துவின் சபதம் வெல்கிறது.துரை கொல்லப்படுகிறான்.பூங்சோலையின் காதல் தனிமையின் பெரு விசும்பாய் கனக்கிறது முத்துவும் மற்றொரு பிணமாய் சபதத்தின் முடிவருகில் மாண்டுபோனான்.

வரலாற்றின் குரூரங்கள், வழி நெடுகிலும் கலகமாய் கண்ணீரமய் நீள்கிறது.யார் குருதி என்று அறியா அடத்தியான ரத்தம் இன்னும் எங்கள் கால்களில் பிசுபிசுக்கிறது.அது கண்டங்கள் தாண்டி நிலங்களை ஊடறுத்து தேசத்தின் சாலைகள் எங்கிலும் அதற்கென்ற  பிரத்தியேக கதைகளுடன்  வடிந்தபடிதான்இருக்கிறது.எதுவாயின் மறுப்பின்றி ரத்தம் ஒரே நிறம்.

சுஜாதாவை என்னுள் அனுபவித்த தருணம்  மீண்டும் இதமாய் இறுக்கமாய் தொடரும் அந்த  பியானோ மல்லிகை வாசம் தான்.எமிலி என்னும் அந்த வாசம் ஆஷ்லியை தவிப்போடு இறுக அணைக்கிறது.எங்கெங்கோ அலைந்து வந்த  நதியொன்னு நீக்கமற நிரந்தரமாய் சமுத்திரத்துள் அடங்குவது போலொரு அணைப்பு.இங்கு எமிலி மாற்றான் மனையாள் ஆன போதும் ஒரு வாசகிறாய் எனக்குள் முகம் சுழிக்கும் எண்ணமோ இந்த   கண்ணியக்காவலாளியிடம் தோன்றவில்லை.

நானும் அவர்களோடு சேர்ந்து அந்த அணைப்பை கொண்டாடிக்கொண்டிருந்தேன்.
இந்த நாவலின் காட்சிப்புலத்தின் முற்பகுதியின் சாயலை இன்று உணர்ந்தேன் மதராசப்பட்டினம் திரைப்படைப்பில்.



நன்றிகளுடன்
-அதிசயா-
Related Posts Plugin for WordPress, Blogger...