Saturday, March 5, 2016

நிலவானவளே நேற்று நீ இருந்தாய் ஓர் அற்புதம் போல.இப்போதும் அப்படியே தான்..

அனன்யா இன்று உனக்கொரு சத்தியம் செய்கிறேன்.என் மீது காட்டும் பிரியங்களின் பொருட்டு எனை திருமணம் செய்து கொள் என்று உனை கேட்கமாட்டேன் அனன்யா.உன் மீது மிகவே மரியாதை கொண்டுள்ளேன்.உனை யாரென்று அறியாதவன் நான்.ஆனாலும் நீ தேவதையாய் இருந்தல்வா என்னை ஆசீர்வதிக்கிறாய்.உனக்கான கனவுகள் மீது என் விருப்பங்களை திணிக்க மாட்டேன் அனன்யா.ஒரு காற்றுப்போல இப்போது இக்கணம் உனை உணர்வதே போதுமாயிருக்கிறது.
அனன்யா திருமண மாலையின் பாரங்கள் உன் மென்மையான சிறகுகளை பலவீனப்படுத்தும்.ஆதலால் திருமணம் பற்றி பேசமாட்டேன்.உன்னுடன் கூடவே வாழ்வனைத்தும் ஓர் வழிப்போக்கன் போல வந்து விடுகிறேன்.அனன்யா என் சபல புத்தியும் திடமற்ற நினைவின் பொருட்டேனும் என்னையும் விரல் கோர்த்தபடி கூட்டிச்செல்வாயா?
நீ இன்றி என்னால் இங்கு இயங்க முடியவில்லை அனன்யா.இந்த காட்டில் இப்போது பொழியும் குளிர்ந்த நிலவும் உன் உதட்டுச்சாயமும் போதும்.இரவையும் பகலையும் மாறிமாறி படைத்தபடி இங்கேயே வாழ்ந்துவிடுவோம்.பின்பு நம் கேசத்தின் சரிவு வழி வேறோர் தேசம் போய்விடுவோம் அனன்யா.என் நிலவானவளே நேற்று நீ இருந்தாய் ஓர் அற்புதம்  போல.இப்போதும் அப்படியே தான்....இப்பளிங்கு விரல்கள் போல் ஏதேனும் உண்டோ சொல்.போர்க்களத்தின் முன்வரிசையில் நின்றிருந்தேன்.நடுக்கமுறும் கால்களை நிறுத்தி வைப்பதே எனக்கு போராட்டமாய் இருந்தது.ஆனாலும் விசுவாசம் மிக்க போராளியாய் எனை காட்டிக்கொண்டிருந்தேன்.போதும் அனன்யா இனி உடைவாள் மற்றும் ஆயுதங்களை அனைத்தையும் ஸ்பரித்து நீ பூக்களாக்கிவிடு.என்னை நான் விரும்பும் உருவமாகவே இருக்கவிடு.நேசித்தல் ஒன்றே தேவை.அதுவும் உன்னிடமிருந்தே வேண்டும் அனன்யா.இச்சந்திப்புக்கள் எதுவரை நீளுமோ?இளைப்பாறுதலே உன்மீது கிறக்கமுற்றிருக்கிறேன்.ஆனாலும் என் நிதானங்களை உன் தேவ நேசத்தால் நிரப்பி வைத்துள்ளேன்.ஆதலால் சத்தியம் செய்கிறேன்.

அனன்யா  உன் போல் ஆறுதலை வேறுஎங்கும் உணரவில்லை.அடிமனதில் உறைந்து போன அச்சங்களும் பிடிப்பின்மையும் நடுநிசிகளில் அலறலாய் துரத்துகிறது அனன்யா.என்னிடமிருந்து தப்பித்து ஓடிக்கொண்டிருக்கிறேன் அனன்யா.வீடற்றவனின் வேதனைகளை ஒத்தது இந்த தப்பியோடல் என்பது.எதுவரை அனன்யா ஓட முடியும் சொல்? யாருமே கேட்கவில்லை என்கிறார்கள்,அன்றேல் பழகிவிடும் என்கிறார்கள்.என் அனன்யா பக்கம் வா.உனக்கே கேட்கும் அனன்யா அந்த அலறல்கள்.அதன் பின்னும் இப்படியே தான் எனை நேசிப்பாய்.பின் எப்படி நீ இல்லாத இரவின் பாடல்களை ரசிக்க முடியும்.மருண்டு போய்விடுவேனே.வேண்டாம் அனன்யா என்னையும் கூட்டிப்போய்விடு.ஏகாந்தம் ஒன்றில் எனை தரித்துவிடு.அனன்யா முடிந்தவரை முயன்றுவிட்டேன் அனன்யா.எந்தப்பாடல்களிலும் பொருள் இருப்பதாய் தோன்றவில்லை.இதை சொல்லி அவர்களை சங்கடப்படுத்தவும் முடியவில்லை.அனன்யா உனை நிர்ப்பந்திக்கவில்லை.ஆனால் தயை கூர்ந்து கருணை காட்டகேட்கிறேன்.எனையும் கூட்டிப்போ..அன்றேல் நாளையும் இங்கு வா அனன்யா..

Thursday, March 3, 2016

அனன்யா இந்த மழை இரவுகள் இனிமேல் உனை அன்றி யாரை நினைவுபடுத்தும்...!

அனன்யா உன்பாதங்களை என் மடிமீது ஏங்திக்கொள்கிறேன். இந்த மென்மைகளுடனே இப்பொழுதை கடந்து விடுவேன்.அனன்யா எனக்கொரு காதல் இருந்தது.அது இன்னும் ஒரு பாடலை போல நினைவிருக்கிறது.அது ஒரு முரண்காதல் என்று நீ சொல்லமாட்டாய்.எதைப்பற்றிய நினைவுகளுமற்று வெறும் காதலால் இயங்கிக்கொண்டிருந்தேன்.அனன்யா நானாய் மடித்துக்கொண்ட சிறகுகளை வெகுதூரம் தாண்டி விரிக்க துணிந்த காலம் அது.இப்போது  சிறகுகளை பற்றி நினைக்கவே பதறுகிறேன்.அனன்யா இந்தப்பொன் பாதங்களை ஒரு தடவை முத்தமிட்டு கொள்வேன்.அனன்யா காதல் கொள்வதை தீட்டு என்று நினைத்த பதின்ம வயதுகளை போல மீண்டும் நேசம் துறந்த ஏகாந்தத்திற்குள் வாழும்படி என்னையே சபித்துக்கொண்டவன் நான் அனன்யா.

ஆனாலும் அந்த ஏகாந்தமே எனக்கு சுதந்திரம் என்று கருதினேன்.என்றேனும் ஜன்னல் அருகில் நின்னறபடி நானாய் விடைகொடுத்த அந்த நேசத்திற்காய் கற்பனையில் கையசைத்துக்கலங்கியிருக்கிறேன்.அனன்யா அறியாவா? என் இத்தனை இறுக்கங்களின் பின் விட்டுப்போன சாரல் ஒன்று இருந்த்து என்பதை??பின்னாளில் ஏதேதோ கடமைகள் இலட்சியங்கள் முகமூடிகள் பந்தங்கள் என்றான பயணங்ளில் இப்போது குற்றவாளியாய் பரிதாபத்திற்குரியவனாய் எனை காண்கிறேன்.யாராலும் தேற்றிவிட முடியாத என் அழுகைகளை உன் ஸ்பரிசம் ஒன்றே குணமாக்கும் என்பதை அறிவாய்.

அனன்யா ஆறுதலளிப்பவளே என் மீது பரிதாபம் கொள்ளமாட்டாய் என்று இப்போதும் நினைக்கிறேன். வாழ்வென்பது பயணமே.உள்ளே ஆழ்ந்த அமைதியை வளர்த்துக்கொண்டு இந்த உலகெங்கும் பயணிக்க வேண்டும்.காற்றுப்போல..அறியாதமுகங்கள்..யாருமற்ற தெருக்கள் காட்டுப்பாதைகள் என நிமிடங்கள் எல்லாம் துருதுரு என்று இயங்கவேண்டும்..ஆனால் அனன்யா ஒரு குளம் போல நீண்ட நேரமாய் இங்கே தான் தேங்கியிருக்கிறேன்.பாசிமூடி வெளிச்சங்களை மறந்த குளம் போல...அதுவே எனக்கு மிகுந்த துக்கத்தை உண்டாக்குகிறது.அனன்யா என்அனன்யா கேள் இதுவல்ல நான் என்று உரக்கக்கத்த வேண்டும் அன்ன்யா.

உனை மூத்தவளாய் பெற்றிராத உன் அன்னையின்  இரக்கத்திற்காய் கடவுளுக்கு நன்றி.மூத்த மகனின்..மகளின்..சாலைகள் இளையவர்களை காட்டிலும் கடினமானது என்பதை அறிந்து கொள்.உனை மூத்தவளாய் பெற்றிருந்தால் இத்தனை மணிகளாய் நீ என்னை சகித்திருக்கமாட்டாய். மூத்தவர்களின் அலாரங்களாய் அம்மாவின் முத்தங்களாலும் கண்ணீராலும் ஆனது.நீ இரக்கமானவள்.இந்த வழிப்போக்கனின் விசும்பல்களை கவிதை போலல்லவாகேட்டுக்கொண்டிருக்கிறாய். மீண்டும் எப்போது  காண்பேன் அனன்யா??ஆதலால் தான் இத்தனை இறுக்கமாய் உன் கைகளை பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கிறேன்.அனன்யா இந்த மழை இரவுகள் இனிமேல் உனை அன்றி யாரை நினைவுபடுத்தும்.அனன்யா பரிசுத்தமான உன் ப்ரியங்களை காட்டிலும் வேறெந்த எண்ணமும் என் மனதில் இல்லை .ஆதலால் நீ நெற்றிவியர்த்து நகங்களை கடித்தபடி எந்தப் பொய்களும் சொல்லவேண்டியிருக்காது அப்பாவிடம்.உன்னை இப்படி ஆசுவாசமாய் பார்க்கவே ஆசைப்படுகிறேன்.அனன்யா....!

 



-அதிசயா-




Related Posts Plugin for WordPress, Blogger...