மனதிற்கு இனிய பதிவுலகின் சொந்தங்களுக்கு அதிசயாவின் நேசம் மிகுந்த வணக்கங்கள்!நலமாக உள்ளீர்களா???நலம்வாழ வாழ்த்துகிறேன்.
இருளுக்குள் விரியும் ஓவியங்கள் எப்படியிருக்கும்????வாருங்கள் சொந்தங்களே இதைப்பற்றியும் பேசுவோம்.
"மாதவி மகளொருத்தி கண்ணகியானால்
கண்ணகி மகளொருத்தியும் மாதவியாய்........."
விவகாரமான விடயம் என விலகிப்போகாதீர்.இயல்பாய் பேசுவோம்.என்னை எழுதத்தூண்டிய வைரவரிகள் இவை.
ராகங்கள் பலவிதம் சொந்தங்களே!இனிமையாய்,இயல்பாய்,அழுகையாய்,அழகாய்,கிளுகிளுப்பாய்,தெய்வீகமாய் இப்படியாய் பல இராகங்கள்.இப்போதைக்கு பேசுவோம் இராத்திரி இராகங்கள் பற்றி!இது கலையின் வழுவா???கலைஞன் வழுவா??யாரறிவார்.யாமறிவோமா?
புனைவுகள் விலக்கி இதுபற்றிச் சொன்னால் விலைமாதர் விதி பற்றி பேசப்போகிறேன்.
ஒருகாலம் அடிமைப்பட்டுக்கிடந்த பெண்ணியம் இன்று வீறு கொண்டாலும் தீண்டத்தகாதவர்கள் என விலக்கப்பட்ட "தலித்துகள்" போல "பேசப்படாத,பேசப்படக்கூடா"த" தலைப்புகள் கூட இன்னும் இருக்கத்தான் செய்கின்றன்.
என்றோ ஒருநாள் இந்தச்சிந்தனைக்கோடு எனை கடந்து போன போது நானும் அடைமொழிகளுக்கு பயந்து அமைதிகாத்தவள் தான்.இன்று பேசும்படி உள்ளுணர்வு சொல்கிறது.அதிசயாவின் எழுத்துக்களில் இவை பேசப்படுவதையிட்டு நான் கூசவில்லை.என்குரல் இன்று தைரியம் கொண்டதையிட்டு எனக்கு திருப்தியே!
நாகரீகங்கள் எல்லாம் இலக்கியங்களோடு தவழ்ந்து வந்ததென்றால்,இந்த நாகரீகமும் இலக்கிய காலங்களிலே விதைக்கப்பட்டதையும் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.சங்ககாலப்பெருவழக்கில் ஆரம்பித்த "ஆடல் மகளிரின்" இன்பங்கள் துய்க்கப்பட்டு, தொடரப்பட்டு, "தாசிகளாகி" "வேசிப்பெண்டிர்" என பெயர் பெற்று இன்று "விலைமகளாய்" திரிபுற்று தொழிலாகித் தொடர்கிறது.
இன்று இது ஒரு தொழில்.பல இடங்களில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்.
சங்ககாலத்தின் ஆரம்பங்களில் நின்று சங்கடங்கள் மிக்க இக்காலம் வரையான நாட்களை காலப்பெருவெளியாகக்கணக்கிட்டால் இந்த விலைமக்களின் பாதங்கள் பதியாத வரலாறு இல்லை.அத்தனை சுவடுகளிலும் கனமான கண்ணீர் கால்களில் ஒட்டிக்கொள்கிறது.இது பற்றி பேச நமக்கும் கடமையுண்டு.நாமும் வரலாற்றின் மனிதர்கள் தான்.இந்த ஈரங்கள் நம் கால்களிலும் ஒட்டியபடி பிசுபிசுக்கிறது.
வறுமையின் உச்சம்,வலிமையின் எச்சம் இவை தான் இந்த இராத்திரி ராகங்களில் சுருதி என்பேன்..வறுமையின் உச்சம் இவர்களை விலைமாதர் ஆக்குகிறது என்றால் பணம் என்ற வலிமையின் உச்சம் இவர்களை வாழவைக்கிறது.கடைசிவரை அதே பெயருடன் வாழவைக்கிறது.
புரிகிறது சொந்தங்களே!பிழைப்பிற்கு வேறு வழியில்லையா என என்னிடமாய் முரண்படுவது.குறுகிய காலத்தில் குறைகள் தீர்க்க இவர்களுக்கு இலகுவாய் இவ்வழி தான் தெரிகிறது.ஒருமுறை இந்த வாசல்களுக்குள் நுழைந்துவிட்டால் பாதங்கள் விலத்தினாலும் அந்த வாசல்கள் விடுவதில்லை.கறைபட்ட சட்டை ஒன்றை இலகுவாய் சலவைக்கு இட்டுவிட மனம் ஒப்பினாலும் கறைபட்ட மாது ஒருத்தியை கறைநீக்கிப்பார்க்க எத்தனை மனம் ஒப்புகிறது???குளித்துவிட்டாலும் அழுக்காகவே அருவருக்கப்படுவதை விட அதே அழுக்குடன் இருப்பதை மேல் என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
இருளோடு நிறையும் அந்த முத்தங்களில் ஈரம் இருப்பதில்லை.
படுக்கையின் விரிப்புகளில் நேசங்கள் முளைப்பதில்லை
தளுவல்களில் ஆழங்கள் தெரிவதில்லை.
ஒற்றைப்புன்னகை கூட அன்பாய்
அவள் பால் தெறிப்பதில்லை.
இருந்தும் இந்த வாழ்க்கைக்கு தம்மை வசதிப்படுத்திக்கொள்கிறார்கள்.சதை மட்டும் பெண்ணாகிப்பிறந்தது இங்குதான்.இதன் பின் எத்தைனையோ சத்தங்கள் ஏதேதோ பாரங்கள்.அத்தனையையும் அள்ளியெடுத்து முடிந்து கொள்கிறார்கள் மல்லிகை மலர்களின் காம்புகளோடு.இருண்டாலும் விடிந்தாலும் இவர்கள் ராத்திரி இராகங்களாகவே இசைக்கப்படுகிறார்கள்.
எத்தனை பெண்ணிய கோசங்கள் எழுந்தாலும் இந்த ஐன்னல்கள் இறுக்கமாக அடைக்கப்பட்டுக்கிடக்கின்றன அடுத்த பந்தி ஒன்றிற்கான ஆயத்தமாய்.
விட்டுவிடு வேண்டாமென மனது கூப்பாட போட்டாலும் வயிற்றின் விரல்கள் வலுவாய் விறாண்டும் போது மனமாவது மானமாவது
எத்தனை மனிதர்கள் எத்தனை எத்தனை தெருக்களிலிருந்து வந்தபோதும் இவர்கள் மனதில் கிளம்பும் வினாவெல்லாம் ஒன்றே.மீண்டும் எப்போது சந்திப்போம் என்பதே.இது கூட பாசத்திற்காக அல்ல பரிதாபம் பணத்திற்காய்.இங்கு போனபின்னும் வீடு நினைத்து அழுபவர்கள்(ஆண்கள்) சிலர் என்றால் வீட்டிற்காகவே தினமும் அழுபவர்கள் இந்த விலைமாதர்கள்.பரிதாப்பட்ட பின்னம் அவள் படுக்கையை பகிர்வதை விட மற்றொரு பாதை ஒன்றிற்கான ஆரம்பங்களை கொடுப்பதே சரியானது.
மெழுகுவர்த்தி தியாகம் செய்கிறது என்றால் இவர்களையும் ஏற்கத்தான் வேண்டும்.அது மெழுகு உருகி எழும் தியாகம் என்றால் இது அழகு உரித்து எழும் தியாகம்.எத்தனை பந்திகள் எத்தனை பந்தல்கள்.அத்தனையிலும் அவள் பூத்தல்லவா இருக்கிறாள்.
வேண்டாதவர்கள் என்று அருவருக்காதீர்கள்.இங்கும் ஒரு பெண்மை இருந்தது.இப்போதும் இறந்து கொண்டே இருக்கிறது.வாருங்கள் சொந்தங்களே!பெண்ணியம் பேசப்பட வேண்டுமென்றால் சில இருட்டுகளும் வெளிச்சப்படவேண்டும்.
முதலில் பேசத்துணிவோம்.இவர்களின் தொழில் முறை சரி என்ற வாதிடவோ அங்கீகாரம் பெற்றுக்கொடுக்கவோ விளையவில்லை சொந்தங்களே.இவர்களும் பெண்கள் என்பதை தான் சத்தமாய் இன்னுமின்னும் சத்தமாய் பேச விரும்புகிறேன்.
எதற்கும் ஒரு தீர்வுஉண்டென்றால் இதற்கும் தீர்வு எங்கோ இருக்கத்தான் வேண்டும்.இது ஆபாசம் அல்ல.அசிங்கம் அல்ல.
பதிவுலகம் என்பது பரந்தது.மாற்றத்திற்கான விதை ஒன்று இங்கு போடப்பட்டால்ஒருநாள் அது நிச்சயம் விருட்சமாகும் எனற நம்பிக்கையில் தான் இத்தனையும் பேசுகிறேன் சொந்தங்களே!
நேசங்களுடன்
-அதிசயா-
( பதிவுலக சொந்தம் சிகரம் பாரதிக்கு அன்பான நன்றிகள்.நிச்சயம் மற்றொரு தரம் பேசுகிறேன்.)